Skip to main content

“சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம்..” - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

"The ruined university is Annamalai University ..." - Former Minister CV Shanmugam

 

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தே தீரவேண்டும் என போர்க்கொடி தூக்குகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். முடியவே முடியாது என்கிறார் இந்நாள் அமைச்சர் பொன்முடி. 

 

கடந்த ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முயற்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. ஆனால், தற்போதைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, “பல்கலைக்கழகத்தின் பெயரை மட்டும் தான் அறிவித்தார்கள். எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதனால் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கிடையாது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து கூட்டு பல்கலைக்கழகமாகச் செயல்படும்” என்று அறிவித்துள்ளார். 

 

“இதை ஏற்றுக்கொள்ள முடியாது; எங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், செயல்பட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், தலைமையில் விழுப்புரத்தில் நேற்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. 

 

இதற்கான அறிவிப்பு சட்டசபையில் வெளியிடப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. 26ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணத்தினால் மேற்கொண்டு பணிகளைச் செய்ய முடியவில்லை. 

 

பல்கலைக்கழகம் உருவாக்கம் அறிவிக்கப்பட்டபோது தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அப்போது, ‘என் தொகுதியில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை எப்படி இரண்டாகப் பிரிக்கலாம்’ என்று கூறினார். திமுகவில் தலைவர்கள் ஊருக்கு ஒரு பேச்சு எனப் பேசி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க நினைக்கின்றனர். அதற்கு அமைச்சர் பொன்முடி, நிதி இல்லை எனக் கூறி மக்களைத் திசை திருப்பி ஏமாற்றுகிறார். 

 

ஜெயலலிதா பல்கலைக்கழகம் நடத்த முடியாதவர்கள் தமிழகத்தில் புதியதாகப் பல கலைக் கல்லூரிகள் உருவாக்கப் போவதாகத் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளனர். அது மட்டும் எப்படி சாத்தியம்? ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படுவதால் பொன்முடிக்கு என்ன நஷ்டம்? இதற்காக இந்த தொகுதி எம்.எல்.ஏ.கூட எந்த குரலும் கொடுக்கவில்லை. நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, பல்கலைக்கழகம் நடத்த ஒப்புதல் அளித்தும் அதைச் செயல்படுத்தாத இவர்கள் மதுரையில் 200 கோடி ரூபாயில் கலைஞரின் பெயரில் நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளனர். இது எப்படி சாத்தியம்? 

 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் மோசமான சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ற நிலை உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் கூடுதலாக நிதி வழங்கி வருகிறது. ஆனால், ஒரு முறை 100 கோடி ரூபாய் ஒதுக்கி புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி நடத்த முடியாது என்பது கேலிக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைவதை ஏற்றுக்கொள்ள பொன்முடி போன்றவர்களுக்கு மனமில்லை. காரணம் அவர் இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வைத்து நடத்தி வருகிறார். தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் துவங்க, அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகக்கூட ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக் கூடாது என்ற எண்ணம் இருக்கலாம். 

 

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பெயர் முக்கியமில்லை; நல்ல பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். விழுப்புரத்தில் சுற்றியுள்ள மாவட்ட மாணவர்கள் சிரமமின்றி பல்கலைக்கழகத்தை அணுக வேண்டும். அதுவே போதும்” இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம், தடையை மீறி நடத்தப்பட்டதால் சி.வி. சண்முகம் உட்பட பல அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.