Skip to main content

“சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம்..” - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

"The ruined university is Annamalai University ..." - Former Minister CV Shanmugam

 

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தே தீரவேண்டும் என போர்க்கொடி தூக்குகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். முடியவே முடியாது என்கிறார் இந்நாள் அமைச்சர் பொன்முடி. 

 

கடந்த ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முயற்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. ஆனால், தற்போதைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, “பல்கலைக்கழகத்தின் பெயரை மட்டும் தான் அறிவித்தார்கள். எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதனால் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கிடையாது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து கூட்டு பல்கலைக்கழகமாகச் செயல்படும்” என்று அறிவித்துள்ளார். 

 

“இதை ஏற்றுக்கொள்ள முடியாது; எங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், செயல்பட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், தலைமையில் விழுப்புரத்தில் நேற்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. 

 

இதற்கான அறிவிப்பு சட்டசபையில் வெளியிடப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. 26ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணத்தினால் மேற்கொண்டு பணிகளைச் செய்ய முடியவில்லை. 

 

பல்கலைக்கழகம் உருவாக்கம் அறிவிக்கப்பட்டபோது தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அப்போது, ‘என் தொகுதியில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை எப்படி இரண்டாகப் பிரிக்கலாம்’ என்று கூறினார். திமுகவில் தலைவர்கள் ஊருக்கு ஒரு பேச்சு எனப் பேசி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க நினைக்கின்றனர். அதற்கு அமைச்சர் பொன்முடி, நிதி இல்லை எனக் கூறி மக்களைத் திசை திருப்பி ஏமாற்றுகிறார். 

 

ஜெயலலிதா பல்கலைக்கழகம் நடத்த முடியாதவர்கள் தமிழகத்தில் புதியதாகப் பல கலைக் கல்லூரிகள் உருவாக்கப் போவதாகத் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளனர். அது மட்டும் எப்படி சாத்தியம்? ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படுவதால் பொன்முடிக்கு என்ன நஷ்டம்? இதற்காக இந்த தொகுதி எம்.எல்.ஏ.கூட எந்த குரலும் கொடுக்கவில்லை. நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, பல்கலைக்கழகம் நடத்த ஒப்புதல் அளித்தும் அதைச் செயல்படுத்தாத இவர்கள் மதுரையில் 200 கோடி ரூபாயில் கலைஞரின் பெயரில் நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளனர். இது எப்படி சாத்தியம்? 

 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் மோசமான சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ற நிலை உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் கூடுதலாக நிதி வழங்கி வருகிறது. ஆனால், ஒரு முறை 100 கோடி ரூபாய் ஒதுக்கி புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி நடத்த முடியாது என்பது கேலிக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைவதை ஏற்றுக்கொள்ள பொன்முடி போன்றவர்களுக்கு மனமில்லை. காரணம் அவர் இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வைத்து நடத்தி வருகிறார். தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் துவங்க, அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகக்கூட ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக் கூடாது என்ற எண்ணம் இருக்கலாம். 

 

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பெயர் முக்கியமில்லை; நல்ல பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். விழுப்புரத்தில் சுற்றியுள்ள மாவட்ட மாணவர்கள் சிரமமின்றி பல்கலைக்கழகத்தை அணுக வேண்டும். அதுவே போதும்” இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம், தடையை மீறி நடத்தப்பட்டதால் சி.வி. சண்முகம் உட்பட பல அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.