Skip to main content

பயிர் நிவாரணத்திற்கு விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம்... வீடியோவில் சிக்கிய பெண் அதிகாரி!

Published on 20/01/2021 | Edited on 21/01/2021

 

Rs 200 from farmers for crop relief ... Female officer caught in video!

 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பருவம் தவறிப் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் சுமார் 15 லட்சம் ஏக்கர்களுக்கு மேலாக தண்ணீரில் மூழ்கி நாசமாகின. அதேபோல மிளகாய், கடலை, உளுந்து செடிகளும் நாசமாகியுள்ளது. பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட இழப்பிற்கு பேரிடராக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கேட்டு விவசாயிகள் ஆங்காங்கே மறியல் போராட்டங்ளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் பயிர் சேதங்களை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அரசும், ஆட்சியர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு விவசாயியும் சேதமான தன் வயலில் நின்று படம் எடுத்து அத்துடன் சிட்டா, பாஸ்புக், ஆதார் நகல் என ரூ.200 வரை செலவளித்து கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். இப்படி எல்லாவற்றையும் இழந்து நிவாரணத்திற்காக விண்ணப்பிக்க அரசு சொன்ன ஆவணங்களுடன் செல்லும் விவசாயிகளிடம் வருவாய்துறை அதிகாரிகள் ரூ.200 லஞ்சமாக பெற்று வருகின்றனர். இது "வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக" உள்ளதாக கூறுகிறார்கள் விவசாயிகள் வேதனையாக.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் இதுபோல பணம் வசூல் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், கொடிவயல் கிராமத்தில் அந்த கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியே விவசாயிகளிடம் ரூ.200 வாங்குவதும், இது டைப் படி வாங்குவதாக காரணமும் சொல்லிக் கொள்கிறார். இவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்த இளைஞர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அதே தாலுகாவில் உள்ள சில கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டால், அப்படி யாரிடமும் பணம் வசூல் செய்யக் கூடாது. டைப் செய்ய தாலுகா அலுவலகத்தில் அதற்கான பணியாளர்கள் உள்ளனர் என்கிறார்கள்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய ஆசாமி; காப்பு போட்ட காவல்துறை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Police action on Worker who threatened women by making obscene videos

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (42). இவர் அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் பல பெண்களுடன் பழகி வந்துள்ளதாகவும், அவர்களுடன் தனியே இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சில பெண்கள், பாரதிராஜாவுடன் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். 

அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா மீது அந்த பெண்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், பாரதிராஜாவின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.