Skip to main content

"என் மகனைக் காப்பாற்றுங்கள்!" - ரவுடியின் தாயார் மனு!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

Rowdy's mother petitions the Human Rights Commission

 

காஞ்சிபுரத்தையே கதிகலக்கிவந்தவர் பிரபல தாதா ஸ்ரீதர் தனபால். காஞ்சிபுரத்தை அடுத்த திருபருத்திகுன்றத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர், 1990ஆம் ஆண்டு மிகச் சாதாரணமாக சுற்றிவந்தவர். அவரின் மாமாவுடன் பஜனை குழுவில் உதவியாக இருந்து வந்த ஸ்ரீதரின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் வேறுவேலை பார்த்துக்கொள் என அனுப்பிவிட்டார் அவரது மாமா. 


அதன் பின்னர் வேறுவழியில்லாத ஸ்ரீதர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாராய சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் சேர்ந்தார். நாளடைவில் சக்கரவர்த்திக்கு நம்பிக்கைக்கு உரியவராகி, பின்னர் அவரின் மகளை திருமணம் செய்துகொண்டார். சக்கரவர்த்திக்கு வயதானதால், ஸ்ரீதர் வியாபாரம் முழுவதும் பார்த்துக்கொண்டார். சாராய வியாபாரப் போட்டியால், பெண் சாராய வியாபாரியைக் கொலை செய்தார். பின்னர் உயர் காவல்துறை அதிகாரி தொடர்பால் ஸ்ரீதரின் சாராய சாம்ராஜ்யம் விரிவடைந்தது. பின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கும் தமிழகத்தில் சில மாவட்டத்திற்கும் லாரி டாங்கரில் சாராயக் கடத்தல் நடந்தது. 
 

காவல்துறை வட்டாரத்தை, தன் நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொலை செய்தார். பின்னர், 2005க்கு மேல் ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடிக்கவே, அதிலும் இறங்கி, நினைக்கும் இடத்தை குறைந்த விலைக்கு எழுதி வாங்கும் செயலில் ஈடுபட்டார். அப்படி எழுதித் தராவிட்டால் கொலை சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஸ்ரீதரின் ஒரு ஃபோன் கால் வந்தாலே காஞ்சிபுரம் பகுதியின் தொழில் அதிபர்கள் நடுங்குவார்கள்.

 

ஸ்ரீதருக்கு வலது கரமான டிரைவர் தினேஷ், மற்றும் அவரது கூட்டாளிகள் அவர் சொல்வதை நிறைவேற்றி வந்தனர். சிறையில் இருந்தபடியே கட்டப்பஞ்சாயித்து, ஆட்கடத்தல், பணம் பறிப்பு, கொலை என அரங்கேற்றி வந்த ஸ்ரீதர், கடந்த 2013க்கு பின் சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவானார். பின்னர் வெளிநாடுகளில் இருந்தபடி இதே வேலையில் ஈடுபட்டுவந்தார். இந்தநிலையில், காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி.யாக ஸ்ரீநாதா பதவியேற்ற பின், ஸ்ரீதர் வழக்கு சேலஞ்சாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெரும் வியாபாரிகளும் உதவி செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதரின் நடமாட்டத்தைக் கண்காணித்த ஏ.எஸ்.பி ஸ்ரீநாதா, ஸ்ரீதருக்கு வலது கையாக இருப்பவர்களைத் துரத்தித் துரத்திக் கைதுசெய்து மீண்டும், மீண்டும் சிறையில் அடைத்தார். இதனால் வெளிநாட்டில் இருந்த ஸ்ரீதருக்கு பணம் தடைப்பட்டது. ஒரு கட்டத்தில் காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் விஸ்னு மற்றும் ஏ.எஸ்.பி ஸ்ரீநாதாவை ஃபோனில் மிரட்டினார். 

 

இதனால் வேகமெடுத்த வழக்கால், ஸ்ரீதரின் வங்கி மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டது. பின்னன்  ஸ்ரீதரின் மனைவி கைது செய்யப்பட்டார். இதனால் செய்வதறியாமல் நிராயுதபாணியாக நின்ற ஸ்ரீதர், தான் பதுங்கியிருந்த கம்போடியா நாட்டில் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது. பின்னர் ஸ்ரீதரின் உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரத்தில் இறுதிச் சடங்கும் செய்யப்பட்டது. ஸ்ரீதரின் மறைவுக்குப் பின் நிம்மதி மூச்சு விட்ட காஞ்சிபுரம் தொழில் அதிபர்கள், ஏ.எஸ்.பி ஸ்ரீநாதாவுக்கு நன்றியையும் தெரிவித்தனர். 

 

ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை காஞ்சிபுரத்தில் மீண்டும் கொடூர கொலைகள் அரங்கேறின. தாதா ஸ்ரீதரின் இடத்தை அடைய மீண்டும் பல தலைகள் உருண்டன, கேங் வார் உண்டானது. இதனால் காஞ்சி மக்கள் பீதியில் மூழ்கினர். மீண்டும் காவல்துறை களத்தில் இறங்கி, ஸ்ரீதரின் விஸ்வாசிகளான பொய்யாகுளம் தியாகு, தணிகா, தினேஷ் மேலும் கூட்டாளிகள் சிலரை தேடிப்பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், இந்த முறை இந்த கேங் வார் வேறு திசையை நோக்கிச் சென்றது. தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் லிஸ்டை தயார் செய்தது காவல்துறை. அதில், சிலரை என்கவுண்டர் லிஸ்டிலும் சேர்த்துள்ளனர்.

 

மாவட்ட வாரியாக ரவுடிகளைக் கண்காணிக்கவும் அவர்களை ஒடுக்கவும் உளவுத்துறை மூலமும் டி.ஜி.பி. திரிபாதிக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ரவுடிகளிடம் பணம் பறிக்கும் தனிப்படை போலீசார் தாதா ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷை என்கவுண்டர் செய்ய எதிர் கோஷ்டியிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தினேஷ் தற்போது ஜாமீனில் வெளியேவந்து திருந்தி தன் குடும்பத்தாருடன் சென்னையில் வாழ்ந்துவருவதாகவும், தினேஷின் தாயார் மீரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதனால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் தனிப்படை போலீசார் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாக செந்தில் பாலாஜி சொன்னார்” - மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மனித ஆணையம் தாமாக வந்தும் விசாரணை செய்யலாம். புகார்கள் வந்தாலும் விசாரணை செய்யலாம். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தினேன். அவர் அசதியுடன் காணப்பட்டதால் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினேன். நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச இயலவில்லை என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.

 

அமலாக்கத்துறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தரதரவென இழுத்து சென்றதால் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் படுத்திருந்ததால் அவருடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை நான் பார்க்க முடியவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அமைச்சர் என்பதால் மட்டும் மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரிக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''அப்படி எல்லாம் இல்ல எங்கு மனித உரிமை விதிமுறை மீறல் நடந்தாலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இன்று அமைச்சரை விசாரித்ததால் ஊடகங்களில் பெரிதாக பேசுகிறீர்கள். மற்றபடி எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் விசாரணை நடத்துவோம்'' என்றார்.

 

 

Next Story

கலாஷேத்ரா இயக்குநரிடம் விசாரித்த மனித உரிமைகள் ஆணையம்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Human Rights Commission questioned Kalashetra director

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

 

பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி  கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று (10.04.2023) கலாஷேத்ரா கல்லூரி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

Human Rights Commission questioned Kalashetra director
எஸ்.பி. மகேஸ்வரன்

 

இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து இன்று மனித உரிமைகள் ஆணையமும் கலாஷேத்ரா கல்லூரியில் விசாரணையில் ஈடுபட்டது. 6 வார காலத்திற்குள் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணை குழு சுமார் 1 மணி அளவில் தனது விசாரணையை நிறைவு செய்தது. இந்த ஒன்றரை மணி நேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

 

Human Rights Commission questioned Kalashetra director
இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன்

 

தொடர்ந்து அடுத்த வாரம் தேர்வுகள் முடிந்த பிறகு கலாஷேத்ரா மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது.