Skip to main content

பிரபல ரவுடி 8- வது முறையாக குண்டாசில் கைது!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Rowdy of AIADMK arrested for 8th time in goondas

 

சேலத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரவுடி வளர்த்தி குமார் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

 

சேலம் தாதகாப்பட்டி தர்மலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். ஜன. 13- ஆம் தேதி, அன்னதானப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடி குமார் என்கிற வளர்த்தி குமார், அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். 

 

இதுகுறித்த புகாரின்பேரில் வளர்த்தி குமாரை அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது 2019- ஆம் ஆண்டு அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் ஆகிய காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. 

 

ரவுடி வளர்த்தி குமார், கொலை, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் 40- க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

 

தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் குமார் என்கிற வளர்த்தி குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். 

 

இதையடுத்து காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்த்தி குமாரிடம் ஜன. 27- ஆம் தேதி, குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது. 

 

வளர்த்தி குமார் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அக்கட்சியில் இணைந்தார். ஆனாலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே இவர் 7 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 8- வது முறையாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ரவுடிக்கும் குண்டாஸ்: 

கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சேலம் கிச்சிப்பாளையத்தில் ரவுடி செல்லத்துரை அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இளையா என்கிற இளையராஜா என்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

இந்த வழக்கில் அவர், ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். செல்லத்துரை கொலை வழக்கில் ரியாஸ் மாலிக்ஜான் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என கடந்த ஆண்டு டிசம்பர் 12- ஆம் தேதி அவரை மிரட்டியுள்ளார். 

 

இதுகுறித்து ரியாஸ் மாலிக்ஜான் அளித்த புகாரின்பேரில் ரவுடி இளையா என்கிற இளையராஜாவை கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். 

 

தொடர் குற்றத்தில் ஈடுபட்ட இளையராஜாவையும் ஆணையர் உத்தரவின்பேரில், காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் கைது ஆணை சார்வு செய்யப்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.