Skip to main content

சேலம், விழுப்புரத்தில் கைவரிசை... கொள்ளை கும்பலிடம் இருந்து 83 பவுன் நகைகள், ரொக்கம் பறிமுதல்! 4 பேர் அதிரடி கைது! 

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

robbery gang arrested in salem

 

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல வீடுகளில் நகைகள், பணத்தைத் திருடிய நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83 பவுன் நகைகள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

சேலம் அங்கம்மாள் காலனி பழனி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் அரவிந்த் (25). சேலத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 18) இரவு சேலம் லீ பஜார் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. மர்ம நபர்கள் அவரிடம் கத்தி முனையில் 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். 

 

இதுகுறித்து அரவிந்த், பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த வழிப்பறிச் சம்பவத்தில் சேலம் சினிமா நகரைச் சேர்ந்த பாண்டியன் (35) மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் பாண்டியனை புதன்கிழமை (ஜன. 19) காவல்துறையினர் கைது செய்தனர். 

 

அவருடைய கூட்டாளிகளான ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குமார் (30), தீவட்டிப்பட்டி கோவிந்தன் மகன் அண்ணாமலை (37), திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்த சங்கர் (40) ஆகியோரையும் ஜன. 19ல் கைது செய்தனர். இவர்கள் நால்வரும் சேலம் மாநகரம், சேலம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 11 வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்தது. 

 

கடந்த செப்டம்பர் மாதம் பள்ளப்பட்டியில் ஒரு நகைக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த 11 பவுன் நகைகளையும் இந்த கும்பல்தான் திருடியிருப்பது தற்போது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணத்தை பாண்டியன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் பாண்டியன் வீட்டில் நடத்திய சோதனையில் 83 பவுன் நகைகள், 2.50 கிலோ வெள்ளி பொருள்கள், 1.25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர். 

 

பிடிபட்டுள்ள பாண்டியன் மீது மட்டும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 20 குற்ற வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் விசாரணையில் இருக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். 

 

நீதிமன்ற உத்தரவின்பேரில் நால்வரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.