Skip to main content

தெலுங்கானாவில் பிடிபட்ட கொள்ளையர்கள் ஓசூர் அழைத்து வரப்பட்டனர்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

 The robbers caught in Telangana were brought to Hosur!

 

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தெலுங்கானாவில் பிடிபட்ட கொள்ளையர்கள் 7 பேரை காவல்துறையினர் விசாரணைக்காக ஓசூர் அழைத்து வரப்பட்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளை, பட்டப்பகலில் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை அடித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ஓசூர் ஹட்கோ போலீசார், சம்பவம் நடந்த 18 மணி நேரத்தில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநில போலீசார் உதவியுடன் ஹைதராபாத் அருகே கொள்ளை கும்பலைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள், ஒரு லாரி, டாடா சுமோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

உடனடியாக தெலங்கானா சிறையில் அடைக்கப்பட்ட கொள்ளையர்களை, ஓசூருக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஹைதராபாத் சென்ற ஓசூர் போலீசார், கொள்ளையர்களை ஓசூர் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு அங்குள்ள சைபராபாத் நீதிமன்றத்தில் ஜன. 25ம் தேதி மாலை மனுத்தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன. 26) கொள்ளையர்கள் 7 பேரை ஓசூர் அழைத்து வந்தனர். உடனடியாக ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஓசூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். அதில் 3 பேர் பிடிபட்டனர். அந்த சம்பவத்தில் தப்பிய சிலர்தான், முத்தூட் பைனான்ஸ் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடத்த விரைவில் பஞ்சாப் மாநில போலீசாரும் ஓசூர் வர உள்ளனர்.

 

இதேபோல், நாடு முழுவதும் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.