Skip to main content

மறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள்! -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல..’ எனச் சொல்வதுண்டு. அதுபோன்ற  ஒரு சம்பவம், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – ஏழாயிரம்பண்ணை போலீஸ் லிமிட்டில் நடந்திருகிறது. இருவர் உயிரிழந்த இந்த விவகாரத்தில், தன் கடமையைச் செய்வதற்கே திண்டாடித் திணறுகிறது காவல்துறை. 
 

dsp

 

 

20-ஆம் தேதி, சாத்தூர் – விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பிள்ளையாரும், அவருடைய மகன் மாரியப்பனும் கோட்டைப்பட்டி – வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு மாட்டு வண்டியில் சென்றனர். இன்னும் ஆழமாகத் தோண்டினால் தரமான மணல் கிடைக்குமென்று பள்ளத்தில் அள்ளியபடியே இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் இருவரும் புதைந்தனர். அங்கிருந்தவர்கள் மணலை விலக்கி இருவரையும் சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனை,  இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூற, உறவினர்கள் சத்தமில்லாமல் தூக்கிவந்து விஜயகரிசல்குளம் மயானத்தில் உடல்களை எரித்துவிட்டனர். 

மணல் திருட்டிலிருந்து வைப்பாற்றில் நடக்கின்ற அத்தனை சமூக விரோதச் செயல்களும் காவல்துறைக்குத் தெரிந்தே மாமூலாக நடந்துவருகின்றன.  இந்த இரு உயிரிழப்புகளும் காவல்துறையில் ஒரு சிலருக்குத் தெரிந்தே நடந்திருக்கின்றன. விஷயம் வெளியில் லீக் ஆகாது என்ற நம்பிக்கையுடன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், மீடியாக்களின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றவுடன், சம்பவம் நடந்த ஏழாயிரம்பண்ணை லிமிட்டில் வழக்கு பதிவு செய்வதா? உடல்களை எரித்த வெம்பக்கோட்டை லிமிட்டில் பதிவு செய்வதா? என்று சீரியஸாக ஆலோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

நாம் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தை தொடர்புகொண்டோம். “முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதனால், வழக்கு பதிவு செய்யவில்லை. தற்போது வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.  இதுகுறித்துப் பேசுவதற்காக  சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சாத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் விவரம் சொல்ல முடியும்.” என்றனர்.  

சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டோம். அந்த லைனில் “என்ன விவரம்?” என்று கேட்க,  ‘மணல் திருட்டும் உயிரிழப்புகளும் திட்டமிட்டே காவல்துறையால் மறைக்கப்பட்டிருக்கிறது..’ என்று நடந்ததை நாம் விவரிக்க.. அனைத்தையும் கேட்டுவிட்டு  “நான் டி.எஸ்.பி. இல்லை அவருடைய டிரைவர்.” என்றது அந்தக்குரல். ’சரி.. டி.எஸ்.பி.யிடம் பேச வேண்டியதிருக்கிறது. அவரிடம் விபரத்தைச் சொல்லுங்க.’ என்றோம். ஆனால். டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் அடுத்து நம் லைனுக்கு வரவே இல்லை. 

அனுமதியின்றி மணல் அள்ளியபோது புதைந்து இருவர் மாண்ட விவகாரத்தை மறைத்துவிடத் துடிக்கிறதே காவல்துறை! மணல் திருட்டுக்குத் துணைபோகும் காவல்துறையின் கடமை உணர்வை என்னவென்று சொல்வது?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.