Skip to main content

வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் சீண்டல்; தென்காசியில் மத போதகர் கைது

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

 Pastor arrested in thenkasi for taking video and sexually harassing women

 

தென்காசியில் மத போதகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள வடக்கு சிவகாமிபுரத்தின் பிலிவர்ஸ் சர்ச்சில் நாகர்கோவில் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி குமார் என்பவர் மத போதகராகப் பணியாற்றி வருபவர். இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக அரசல் புரசலாக தகவல் கசிந்த நிலையில், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.

 

அதில், '3 குழந்தைகளுக்கு தாயான தன் மகள் விருதுநகரில் வசிப்பவர். வயிற்று வலியால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதன்பின் மகளை சிவகாமிபுரம் பிலிவர்ஸ் சர்ச்சிற்கு கூட்டிச் சென்று மத போதகர் ஸ்டான்லி குமாரிடம் அவளுக்காக ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தனது மகளை 3 நாட்கள் அங்கு தங்கச் சொன்னார். அவர் மீதான நம்பிக்கையால் மகளை தங்க வைத்தேன். ஆனால் மதபோதகர் எனது மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதோடு ஆபாசமாகவும் பேசியுள்ளார். தொடர்ந்து தனது 2வது மகளிடம் தொலைப்பேசியில் மன்னிப்பு கேட்பது போல் நடித்து போலீசில் புகார் செய்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.

 

மேலும் அவர், அருணாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதைப் படம் எடுத்ததுடன் அவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவர் சர்ச்சுக்குள் நவீன சுழல் வீடியோ, ஆடியோக்களுடன் கேமராக்களை பொருத்தி சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

 

இந்தப் புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆலங்குளம் டி.எஸ்.பி. அனுப்பிய புகாரைப் பெற்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி, எஸ்.ஐ. கவிதா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவங்கள் நடந்ததும், மதபோதகர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும் தெரிய வர அவரைக் கைது செய்த போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதே போன்றதொரு புகாரில் கடந்த வாரம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைதான நிலையில் தற்போது பாவூர்சத்திரம் மதபோதகர் ஒருவர் கைதானது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.