![Relief notice to the families of the victims at the Madurai Chithirai Festival!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bs5VPHvgBSvSnNLqco3WFaTSsBVZU9trXfFb-gOoaD8/1650087992/sites/default/files/inline-images/SF.jpg)
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்நிலையில், வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியைக் காண வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் கூட்ட நெரிசலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் காணாமல் போயிருந்தால் மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழா கூட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதேபோல் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாயும் மற்றும் அவர்களின் முழு சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.