Skip to main content

தலை நசுங்கி பலியான ஆட்டோ டிரைவர்... பஸ்சை அடித்து நொறுக்கி தீ வைத்த உறவினர்கள்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Relatives who smashed the bus and set it on fire

 

விழுப்புரம் அருகில் உள்ள பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் (25) என்பவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிவருகிறார். நேற்று (03.12.2021) இரவு அர்ச்சுனன், விழுப்புரம் டவுனிலிருந்து பணாம்பட்டு ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்குச் செல்வதற்காக ஆட்டோவை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே அவரது ஆட்டோ ரோட்டைக் கடக்க முயன்றபோது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் அர்ச்சுனன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை மடக்கி நிறுத்த முயன்றனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அச்சமடைந்து, பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்று விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தின் எதிரில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு பஸ்சை மறித்தும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள், அர்ச்சுனனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் ஆத்திரத்துடன் பஸ்சைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். காவல் நிலையத்தின் அருகில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவரும், நடத்துநரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

 

இதனைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அர்ச்சுனன் உடலை அந்த இடத்திலிருந்து எடுக்கவிட மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த பஸ்சின் கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டு பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர், இருந்தும் விபத்து நடந்த அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.