Skip to main content

லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட வட்டார இயக்க மேலாளர்! 

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

Regional operations manager caught while receiving bribe!


திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர், அவரது ஊரில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக் குழுவுக்கு தலைவராக உள்ளார். இக்குழுவில் விவசாய கூலி வேலை செய்யும் 12 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவினருக்கு அரசால் தாட்கோ நிறுவனத்தின் மூலம் கறவை மாடு வாங்கி சுயதொழில் செய்வதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

 

இந்த ஐந்து லட்ச ரூபாய்க்கு மானிய தொகையாக இரண்டரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை பெற்று வழங்குவதற்காக மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கி வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், வட்டார இயக்க மேலாளராக பணிபுரியும் மல்லிகாவை சந்தித்துள்ளார். அப்போது மல்லிகா, சுய உதவிக் குழுவிற்கு மானிய தொகை பெற்று தருவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கடனுதவி பெற்று தர இயலும் என்று கூறியுள்ளார்.  

 

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜலட்சுமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் நேற்று 16.8.2022 மதியம் ராஜலட்சுமியிடமிருந்து வட்டார இயக்க மேலாளர் மல்லிகா ரூ.12 ஆயிரம் லஞ்சமாக பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.