Skip to main content

‘தவறான விமர்சனங்கள்’ - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Regional Meteorological Centre Explanation about False Reviews

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே, தென்மாவட்டத்தில் பெய்த மழையைத் துல்லியமாகக் கணிக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதாகத் தமிழக அரசு விமர்சித்து இருந்தது. அதேபோல், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், “சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலை இப்போதும் உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சென்னை வானிலை ஆய்வு மையம் தேவையில்லை அது வேஸ்ட்” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தை விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், விமர்சனங்களைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலகத் தரத்திற்கு ஒப்பானவை. அதிவேக கணினிகள் இஸ்ரோவின் செயற்கைக் கோள் வசதிகள் ரேடார்கள் உள்ளன. தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் உலகத் தரத்திற்கு ஒப்பானவை. 

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் உலகத் தரம் வாய்ந்தது என உலக வானிலை அமைப்பு பாராட்டியுள்ளது. சென்னை வானிலையை கண்காணிக்க 2 டாப்ளர் ரேடார்கள் பயனில் உள்ளன. தென் தமிழகத்தைக் கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன. வர்தா, கஜா, மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மைய எச்சரிக்கைகள் காரணமாகப் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், வானிலை மைய பணியாளர்களைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் நவீன மயமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் தவறானவை’ என்று குறிப்பிட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

‘அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Meteorological Department informed Chance of rain in 4 districts in next 2 hours

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (04.01.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே போன்று நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (05.01.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் நகரின் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Meteorological Office informed Chance of Rain in Delta Districts

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே,  மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.