Skip to main content

ஐஏஎஸ் மலர்விழி வீட்டில் நடந்த சோதனை; வெளியான திடுக்கிடும் தகவல்கள்; முழு விபரம்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Receipt books for 15 years; Malarvizhi IAS corruption that has come out

 

சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ள மலர்விழி ஐ.ஏ.எஸ் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெற்றது. 

 

மலர்விழி கடந்த 2018 - 2020 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அப்போது பஞ்சாயத்துகளுக்கு வாங்கக்கூடிய ரசீது புத்தகங்கள் அச்சடிக்கும் விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநில நிதிக்குழு கொடுத்த நிதியில் இருந்து போலியான ஆவணங்களைக் காட்டி ரசீது புத்தகங்களை அச்சடித்து மோசடி செய்ததை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த பட்சம் ரூ. 5000க்கும் அதிகமான பணத்தை தனியாரிடம் கொடுக்கும்போது விதியின் அடிப்படையில் டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால் ரசீது புத்தகங்களை அச்சடிக்க ஆட்சியர் மலர்விழி அந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 பஞ்சாயத்துகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சடிக்கும் விவகாரத்தில் ஆட்சியர் மலர்விழி ஊழல் செய்தது தெரியவந்தது.

 

மேலும் சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு ரசீது புத்தகங்கள் அச்சடிக்கும் டெண்டரை முறைகேடாக வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. டெண்டர் விதிகளை மீறியும் ரசீது புத்தகங்கள் அச்சடிப்பதற்கான விதிமுறைகளை மீறியும் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலர்விழி, அரசுக்கு 1 கோடியே 31 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியுள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த ரசீது புத்தகங்கள் வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட வரி வசூல் செய்வதற்கான புத்தகங்கள் ஆகும்.

 

பஞ்சாயத்துகளுக்கு தேவைப்படும் போது அந்தந்த பஞ்சாயத்துகள் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் மூலம் ரசீது புத்தகங்களை அச்சடித்து பெற்றுக்கொள்வார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் மலர்விழியோ இன்னும் 15 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரசீது புத்தகங்கள் வாங்கி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்தபோது மேலும் ஒரு ஊழல் அம்பலமாகியுள்ளது. ரசீது புத்தகங்களை அச்சடித்த இரு நிறுவனங்கள் 33 பஞ்சாயத்துகளுக்கு ப்ளீச்சிங் பவுடர் சப்ளை செய்த விவகாரத்திலும் ஊழலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

பென்னாகரத்தில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் மலர்விழி ஆட்சியராக இருந்த போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின் மூலம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 மண்டலமாகப் பிரிக்கப்பட்ட 33 பஞ்சாயத்துகளுக்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ப்ளீச்சிங் பவுடரை சப்ளை செய்த விவகாரத்தில் 4 நிறுவனங்கள் இணைந்து கிருஷ்ணனோடு இணைந்து 30 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.