Skip to main content

வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!   

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Real estate person passes away in trichy police investigation

 

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து சங்கர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்துவருகிறார். இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்துத் தலைவர் புவனேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். 

 

இந்நிலையில், நேற்று (28.11.2021) மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து கண்ணிமைக்கும் வேளையில் அவர்கள் கொண்டுவந்த சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘என் கணவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினார். அதற்கு என் கணவரும் உடந்தை என எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்துகொண்டிருந்தனர்.

 

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின்னந்தலை ஆகிய இடங்களில் தாக்கினர். தடுக்கச் சென்ற என்னிடம், ‘அடுத்து விக்னேஸ்வரன்தான்’ எனச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என் கணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான கதிர்வேல் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தக் கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தைப் பெறுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. மேலும், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்தக் கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். சிவகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்