Skip to main content

துப்பாக்கி முனையில் இருவர் கடத்தல்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

real estate businessmans incident villuppuram police investigation

 

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (18/04/2021) சென்னையைச் சேர்ந்த தனது நண்பர்கள் வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரா ஆகியோருடன் ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நிலம் பார்ப்பதற்காகவும், அதை விலை பேசுவதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சிவன் வந்துள்ளார். பின்னர், விழுப்புரம் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அனைவரும் உணவருந்தியுள்ளனர். 

 

அதன்பிறகு அவர்களைச் சந்திப்பதற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் சிவனை தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் ரியல் எஸ்டேட் விற்பனை செய்வதற்கான நிலத்தைப் பார்ப்பதற்காக நாகராஜ் அவரது காரில் சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் அருகேயுள்ள கண்டாச்சிபுரம் சென்றுக் கொண்டிருந்தனர். 

 

அந்த காரை வெங்கடேசன், சம்பத் ஆகியோர் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர். மாலை 05.00 மணியளவில் அவர்களது கார்கள் மழுவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று இவர்களைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், நாகராஜ் ஓட்டிச் சென்ற காரை மடக்கி நிறுத்தினார்கள். பின் அதில் இருந்து பரபரப்போடு இறங்கிய ஐந்து நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகிய இருவரையும் தங்கள் காரில் கடத்திச் சென்றனர்.

 

அந்த காரை பின்தொடர்ந்து நாகராஜ் தனது காரில் சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அதிரடிப் படை காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

 

மேலும் சிவன், ராஜேந்திரா ஆகியோரின் செல்ஃபோன் எண்களில் காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, சிவன் கூறியதாவது, "தன்னை யாரும் கடத்தவில்லை. தொழில் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தங்களை அழைத்துச் சென்றுள்ளனர். தாங்களே வந்து விடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருடன் கடத்தப்பட்ட ராஜேந்திரா சேலம் அருகில் தங்களை கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். 

 

இதனால் குழப்பம் அடைந்த காவல்துறையினர் இருவரின் செல்ஃபோன் எண்களை வைத்து, சிக்னல் எந்தப் பகுதியைக் காட்டுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் சிக்னல் கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதியைக் காட்டியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர், கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதியில் கடத்தப்பட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். துப்பாக்கி முனையில் தொழிலதிபர் இருவர் கடத்தப்பட்டது உண்மையா?நாடகமா? என்பது கடத்தப்பட்ட இருவரும் மீட்கப்பட்ட பிறகு தெரியவரும். மேலும் இச்சம்பவம் மாவட்ட முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.