Skip to main content

மொபைல் ஆப் கடன்கள்... எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

RBI warns public about mobile app loans

 

இணையதளம் மற்றும் மொபைல் ஆப்கள் வழியாகப் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களுக்குக் கடன்கள் வழங்குகின்றன. கடன் வாங்கபவர், கடன் தருபவரை நேரில் பார்க்காமலே இந்த மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள், கடன் கேட்பவரின் பான் கார்டு எண், ஆதார் எண்ணை வாங்கி அதன் மூலமாகக் கடன் கேட்பவரின் கடந்த கால ‘சிபில் ஸ்கோர்களை’ கண்காணித்து, அதன் வழியாக முதலில் குறைந்த தொகையைக் கடனாக கேட்பவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கின்றன. அதனைத் தவணை முறையில் செலுத்தியபின், திருப்பிச் செலுத்தும் முறையை வைத்து, அதிக கடன் தொகையை வழங்குகின்றன.

 

அதேநேரத்தில் பல மொபைல் ஆப் மற்றும் இணையதளங்கள் மூலம் கடன் தரும் நிறுவனங்கள், 3 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க, சேவைக்கட்டணம் என்கிற பெயரில் 500 ரூபாய், வட்டியாக 150 ரூபாய் மற்றும் மறைமுகக் கட்டணம் ஜி.எஸ்.டி எனப் போட்டு சுமார் ஆயிரம் வரை எடுத்துக்கொண்டே மீதித் தொகையை வழங்குகின்றன.

 
பலரும் கடன் கேட்டதும் கிடைக்கிறதே என இதில் சிக்கிக்கொண்டுள்ளனர். பணத்தைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடி, அதன்வழியாக வாட்ஸ்அப் மற்றும் ஃபோன் நம்பர்களுக்கு, இன்னார் கடன் வாங்கினார், கட்டவில்லை எனத் தகவல் அனுப்புவது. மொபைல் கேலரியில் உள்ள புகைப்படங்களைத் திருடி மிரட்டுகின்றனர் என்கிற புகார்கள் எழுந்துள்ளன.

 

இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப் மூலமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாகக் கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன்பெற வேண்டாம். ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுகக் கட்டணம் எனக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன. மேலும், கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அப்படி அதிக வட்டி, மறைமுகக் கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாகக் காவல்துறையில் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

 

மேலும், பொதுமக்களுக்கு கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“97 % ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
97 % Rs 2000 notes withdrawn RBI Information

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.