Skip to main content

அரிசி கடத்தலில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்கள் டிஸ்மிஸ்; பதிவாளர் மீண்டும் எச்சரிக்கை

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Ration employees involved in rice smuggling dismissed! Registrar

 

அரிசி கடத்தலில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

 

தமிழகத்தில், கூட்டுறவுத்துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரும்பான்மையான கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதில்லை. அவ்வாறு கார்டுதாரர்கள் அரிசி வாங்காததால் இருப்பில் இருக்கும் அரிசியை அந்தந்த கடை ஊழியர்களே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் குற்றங்கள் பரவலாக அதிகரித்து உள்ளன. 

 

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூட்டுறவுத்துறை பதிவாளர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்கள், உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பணியாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். 

 

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பலமுறை அறிவுரைகள் கூறப்பட்ட பிறகும், மீண்டும் சில கடை ஊழியர்கள் அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதை தவிர்க்க, அரிசி கடத்தப்பட்டதாக தகவல் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு செய்ய வேண்டும். 

 

அரிசி கடத்தலில் ஊழியர்கள் ஈடுபட்டது உறுதியாக தெரிந்தால், அவர்கள் உடனடியாக தற்காலிக பணிநீக்கமும், துறை ரீதியான விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை நிரந்தர பணிநீக்கமும் செய்ய வேண்டும். இணை பதிவாளர்கள், அந்தந்த மண்டலத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்தி, உரிய ஆலோசனைகள் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரேசன் கடையில் கை விரல் ரேகை பதிவு விவகாரம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Fingerprint registration issue at ration shop TN Govt Order

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இன் படி பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கவில்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது, கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது, வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “கை விரல் ரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி ரேசன் கடைக்கு வரவழைக்கக்கூடாது. கை விரல் ரேகை பதிவின் போது ஆவணங்கள் எதையும் கேட்க கூடாது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்ற தவறான தகவலை தரக்கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ரேசன் கடைக்கு சென்று கை விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளலாம். ரேசன் கடையில் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் குழப்பமின்றி கை விரல் ரேகை பதிவு பணியை முடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Incentive announcement for fair price shop employees!

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை ஊழியர்களும் களப் பணியாற்றினர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது தமிழக அரசு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.