a

ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அருண்மிஸ்ரா அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

Advertisment

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் மொத்தம் 4 பெட்டிகளில் தபால் வாக்குகள், 19, 20, 21 சுற்றுகளில் வாக்கு பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றதிற்கு கொண்டுவரப்பட்டு, 4.10.2019 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வாக்கு எண்ணிக்கையில் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். முதலில் 19,20 ,21 ஆம் சுற்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.

Advertisment

இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை மட்டும் வெளியிட தடை விதித்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பாவு, இன்பதுரை தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதி நடத்துவதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில், ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது