பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், 125 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது இந்தக் கூட்டணி. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார். ஏழாவது முறையாக முதலமைச்சராகும் நிதிஷ்குமாருடன், பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க இருக்கின்றனர்.
தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக ஜெயித்திருக்கிறது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி. லாலுவின் மகன் தேஜஸ்வியின் தலைமையில் வலிமையாக இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்திருந்தன. கூட்டணிக்குத் தலைமை வகித்த ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சி, 144 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையிலும், அக்கட்சியினால் ஆட்சியமைக்க முடியவில்லை.
உதவாத சில கட்சிகளால் தான் ஆட்சியைப் பிடிக்கக் கூடிய இடங்கள், தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிற கோபத்தில் இருக்கிறார் தேஜஸ்வி. இந்த நிலையில், முதலமைச்சர் பதவியேற்பு விழாவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் புறக்கணிக்கிறது என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து, அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ''பிகாரில் நடந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால், மோசடி மூலம் அது மாற்றப்பட்டுவிட்டது. பொம்மலாட்ட அரசின் பதவியேற்பு விழாவை ஆர்.ஜே.டி கட்சி புறக்கணிக்கிறது. பீகார் மக்கள் என்.டி.ஏ கூட்டணியின் மோசடி மீது கோபமாக இருக்கிறார்கள். இந்த மாநிலத்தில், இரண்டு உதவாத கட்சிகளால் உதவாத அரசாங்கம் அமைக்கப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்கப் போகிறவர் பலவீனமானவர், ஆக்கப்பூர்வமான சிந்தனையில்லாதவர்.
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள பாஜகவிடம் முதல்வர் வேட்பாளருக்குத் தகுதியான நபர் யாருமில்லை. மக்களின் ஆதரவு ஆர்.ஜே.டி.க்குதான் இருக்கிறது. பீகாரின் புகழ்பெற்ற தலைவராக தேஜஸ்வி யாதவ் உருவாகியுள்ளார்'' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.