Skip to main content

ரூ.2 ஆயிரத்திற்கு கலெக்டர் கையெழுத்துடன் போலி பாஸ்... பின்புலத்தில் முன்னாள் எஸ்.ஐ!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

ramanathapuram district fake vehicles pass police investigation


ஊரடங்கு காலத்தில் மக்களின் அவசர, அத்தியாவசிய பயணத்திற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் தரப்படும் அனுமதிச்சீட்டினை, பணத்திற்காக ஆட்சியர் கையெழுத்துடன் போலியாக அனுமதிச்சீட்டு தயார் செய்து கொடுத்த நபர்களை காவல்துறை கைது செய்தது அதிர்ச்சியளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய் தொற்றுக் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்க பொதுப்பயணம் முற்றிலும் தடைப்பட்டது. இதில் மருத்துவ சிகிச்சை, துக்க நிகழ்வு, முன்னரே முடிவு செய்யப்பட்ட திருமணம் உள்ளிட்ட பல அவசர நிகழ்வுகளுக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசும், முக்கிய நிகழ்வுகளுக்கு செல்வதாக இருப்பவர்கள் அதற்கான ஆவணங்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பின், பயணத்திற்கான அனுமதிச்சீட்டு கிடைக்கும் என்றும், இதனை ஆன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. முறையாக ஆவணங்களைக் காண்பித்து இந்த அனுமதிச்சீட்டினைப் பெற்று எண்ணற்றவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கீழக்கரைப் பகுதியினை சேர்ந்த ஒருவர், முன்னாள் காவல்துறை அதிகாரி துணையுடன் பணத்திற்காக போலியாக ஆட்சியர் கையெழுத்துடன் அனுமதிச் சீட்டினை வழங்கியது தெரிய வந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலியாக அனுமதி சீட்டினை தயாரித்து அதன் மூலம் சென்னைக்கு பயணம் செய்து, திரும்ப கீழக்கரை பகுதிக்கு வர முயற்சித்த கீழக்கரை வள்ளல் சீதக்காதித் தெருவினை சேர்ந்த சங்கர், அதே கீழக்கரையை சேர்ந்த முகமது அப்துல் கான், முகமது தில்லாகான், அசதுபாத்திமா மற்றும் சமீர் ஆகியோருடன், சென்னை மைலாப்பூரை சேர்ந்த சல்மா ராணி, முகமது ஆபிதா பேகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, இவர்களோடு நைனா முகமது, முகமது மதார் நிசார், முகமது ஆசிப், மிஸ்பஹ் உள் அமீன், அகமது அப்துல் காசிம் மற்றும் நைனா முகமது ஷாஜகான் ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் வந்தனர்.

"கீழக்கரை வள்ளல் சீதக்காதித் தெருவில் ஸ்டுடியோவினை நடத்தி வந்த சங்கர் அப்பகுதியின் பகுதி நேர எழுத்தராக நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கின்றார். இவருக்கும், கீழக்கரைப்பகுதியில் காவல்துறையில் ஓசிஐயூ -வின் எஸ்.ஐ.யாகப் பணியாற்றிகடந்த ஒன்றாம் தேதியில் பணி நிறைவுப் பெற்ற பற்குணம் என்பவருக்கும் நீண்ட நாள் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

அதனடிப்படையில் காவல்துறை வட்டாரத்தில் தனக்கு வேண்டியவற்றை சாதித்து வந்த சங்கரிடம், "சென்னைக்கு சென்று தன்னுடைய உறவினர்களை அழைத்து வர ஆட்சியரின் அனுமதி சீட்டு வாங்கித் தரவேண்டி நைனாமுகம்மது என்பவர் அணுகியிருக்கின்றார்." அவரும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலா ரூ.2 ஆயிரம் தரவெண்டுமென TN67-L- 9799 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா வாகனத்திற்கு 21-04-2020 டூ 24-04- 2020 தேதி வரை ஆட்சியர் வீரராகவின் கையெழுத்துடன் அனுமதிச்சீட்டினை வழங்கியிருக்கின்றார். 

 

g



அனுமதி சீட்டினை வாங்கிக்கொண்டு சென்னை சென்று திரும்பிய அந்த வாகனம் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டியில் நிறுத்தி சோதனையிட அது போலியான அனுமதிச்சீட்டு என தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் போலியாக அனுமதிச்சீட்டு வழங்கிய சங்கரை பிடித்து விசாரிக்கையில், இதுபோல் 20- க்கும் மேல் அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ.பற்குணத்தையும் விசாரித்து வருகின்றோம்." என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.