Skip to main content

முழு ராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டார் பழனி!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

RAMANATHAPURAM DISTRICT ARMY SOLDIER INCIDENT INDIA - CHINA BORDER


லடாக் பகுதியில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால், உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் பூத உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

தங்களது எல்லைப் பகுதியினையொட்டி சாலைகளும், விமானத் தளங்களையும் கட்டமைப்பு செய்து வரும் இந்தியாவினை எதிர்க்க, சமீபத்தில் தனது எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்த சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் ராணுவத்தைக் குவித்தது. போர்ப் பதற்றம் தொற்றிய நிலையில், ராணுவ மட்டத்திலான இரு தரப்பு உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தையினை தொடங்கினர். 
 

RAMANATHAPURAM DISTRICT ARMY SOLDIER INCIDENT INDIA - CHINA BORDER


எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய தரப்பினை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 நபர்கள் சீனா ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட செய்தி வெளியானது. வீரமரணமடைந்த வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகனான பழனியும் ஒருவர். கடந்த 22 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்த வீரமரணமடைந்த பழனியின் பூத உடலை, சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது உறவினர்களின் விருப்பம் என்பதால், நேற்றைய தினம், நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தினை ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வீரராகவ் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

 

இவ்வேளையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் பூத இடல் மதுரை விமான நிலையத்தை வந்தடைய, மதுரை பாராளுமன்ற எம்.பி.வெங்கடேசன், எம்.எல்.ஏ.சரவணன் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் பழனியின் உடலை வரவேற்று, அஞ்சலி செலுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

திருவாடனை தாலுகா, திருப்பாலைக்குடி காவல் எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தில், குறிப்பிட்ட இடத்தில் ராணுவ வீரர் பழனியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட, ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. இறுதியாக முப்படை வீரர்கள் கலந்து கொள்ள, முழு ராணுவ மரியாதையுடன் வீர மரணமடைந்த பழனியின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, பழனியின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பழனியின் மனைவி வானதி தேவி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதே வேளையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.20 லட்சமும் பழனியின் மனைவியிடம் வழங்கப்பட்டது. தேசப்பற்று மிகுந்த பழனி புதைக்கப்படவில்லை எல்லோரது மனதில் விதைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.