Skip to main content

“1021 மருத்துவர்கள் நியமனத்தில் வாய்ப்பு மறுப்பு” - பாமக நிறுவனர் ராமதாஸ்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Ramadoss insists that the government should implement the reservation of seats in Tamil medium education

தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிராகத் தமிழக அரசின் நிலைப்பாடு உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அவற்றில் 75 பின்னடைவுப் பணியிடங்கள் தவிர மீதமுள்ள 946 இடங்களில் 20% இடங்கள், அதாவது 178 இடங்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டம், பா.ம.க வலியுறுத்தலையடுத்து, 2010-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அச்சட்டத்தின்படி அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால் அதை மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர். அதைத் தடுக்க வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் 2020 மார்ச் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற விதியை, கள எதார்த்தத்தை கடைப்பிடிக்காமல் பின்பற்றுவது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப் படவில்லை. இந்த எதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

மருத்துவப் படிப்பு மட்டுமின்றி, பல்வேறு பட்ட மேற்படிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கற்பிக்கப் படுகின்றன. அதனால், அந்தப் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கும் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது.

தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும்  தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக்கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் பிழை தானே தவிர, அவர்களின் பிழை அல்ல. இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90% பேர்  தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இல்லாத தமிழ்வழி மருத்துவப் படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை என்று கூறி இட ஒதுக்கீட்டை மறுப்பது நீதியாகாது. எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கில வழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, அப்படிப்புக்கு முந்தைய நிலைவரை உள்ள படிப்புகளை தமிழ் வழியில் படித்திருந்தாலே அவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டு சட்டத்தில் அரசு திருத்தம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.