Skip to main content

இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? - அன்புமணி

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Ramadoss has questioned justice for Israel, a justice for Sri Lanka in the war crimes trial?

போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் 35 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குக் காரணமான  இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, விசாரணைகள் தொடங்கியுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் இதே நீதி  ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படாதது ஏன்? என்ற வினாவும் எழுந்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி, பன்னாட்டு மனித உரிமைகள் சட்டமும், பன்னாட்டு மனிதாபிமான சட்டமும் மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவற்றின் அடிப்படையில், ஐ.நா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஹாலந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் (International Court of Justice - ICJ) இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது இனப்படுகொலை வழக்கை தென்னாப்பிரிக்க அரசு அண்மையில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய அட்டூழியக் குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளும் பன்னாட்டு நீதிமன்றங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் உச்சமாகப் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், போருக்குக் காரணமான ஹமாஸ் அமைப்பின் மூன்று தலைவர்கள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கான பிடி ஆணையை தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court - ICC) வெளியிட வேண்டும் என்று அந்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் கரீம்கான் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் இலங்கையின் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை  செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகின் மனித உரிமை பேசும் நாடுகள்  கடந்த 15 ஆண்டுகளாக எந்த நடவடிக்கை வேடிக்கைப பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. பொதுவெளியில் முன்வைக்க விரும்பும் வினாவாகும். ஆனால், அதற்கு பதில் தான் இல்லை.

இத்தனைக்கும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரும், அந்த நீதிமன்றம் அமைத்த பன்னாட்டுச் சட்ட வல்லுநர்கள் குழுவும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், தெரிவிக்கப்பட்ட  கருத்துகளை ஆய்வு செய்தால், போர்க்குற்றங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராகவும் எடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.       ‘‘உலகின் முக்கியமான பிரச்சினை ஒன்றில் நாம் தெளிவான முடிவை எடுப்போம். பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்துவதற்கான நமது விருப்பத்தை நாம் வெளிப்படுத்தவில்லை என்றால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் (சில நாடுகளுக்கு எதிராக) மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்ற எண்ணம் உருவானால், அந்தச் சட்டம் நிலைகுலைவதற்கான சூழல்களை நாமே உருவாக்குகிறோம். பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் அனைத்து  தனி நபர்களுக்கும் பொருந்தும், அனைவருக்கும் சமமாகப் பொருந்தும்’’ என்று வழக்கறிஞர் கரீம் கான் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞருக்கு அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில்,‘‘பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடிய தகுதி எந்த போருக்கும் கிடையாது. எந்தக் குழந்தையின் உயிரையும் இன்னொரு குழந்தையின் உயிரை விடக் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் பயன்படுத்தும் சட்டம் மனிதக்குலத்தின் சட்டம், அது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கான சட்டம் அல்ல. போரில் பாதிக்கப்படும் அனைவரையும் அது பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற  வழக்கறிஞர் மற்றும் வல்லுநர் குழு தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு எதிராக  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராகவும் எடுக்கப்பட வேண்டும். அது தான் நீதி.

ஆனால், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது, போருக்குப் பிறகு தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது போன்ற போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ள போதிலும் இலங்கைக்கு எதிராக இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் 15 ஆண்டுகளாக சுதந்திரமாக நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களும், ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights - OHCHR) 17.05.2024 அன்று வெளியிட்ட அறிக்கையானது போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் கடமையை இலங்கை சரியாக செய்யவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால், இலங்கை செய்யத் தவறியதை உலக நாடுகள் தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் கடமை உலக நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தியாவுக்கு உள்ளது.  இலங்கை சிக்கலில், இந்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள நிலைப்பாடு மாறினால் ஈழத்தமிழருக்கு இனியாவது நீதி கிடைக்கும்.

எனவே, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இப்போதும் தொடர்வது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காவிட்டால் இலங்கையுடனான  உறவை முறித்துக் கொள்வதாக  இந்தியா எச்சரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் தந்தை நாடான இந்தியா, அதன் தூதரக வலிமையை முழுமையாகப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
4 Tamil Nadu fishermen arrested!

மீன்பிடி தடைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஆர்வமுடன் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது ஸ்ரீலங்கா நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இன்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்து சிறைபிடித்துச் சென்றுள்ளனர். சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களை இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாடு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“மணல் கொள்ளையைத் தடுத்த கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி” - அன்புமணி கண்டனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 Anbumani Ramadoss emphasized wants to crack down on sand mafia

தமிழகத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர்  கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது. மணல் சரக்குந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த மகிழுந்து சேதம் அடைந்த நிலையில்,  மணல் சரக்குந்தை பின்னோக்கி இயக்கி வந்து  மீண்டும் மோத மணல் கடத்தல் கும்பல் முயன்றுள்ளது. மகிழுந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச்  செயல்பட்டு, மகிழுந்தை இடதுபுறமாகத் திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாகத் தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு  எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி  சமுக அமைதிக்கும் மிகப்பெரிய  ஆபத்து ஆகும்.

மணல் மாஃபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தக் கிராம நிர்வாக அலுவலரை வெட்ட  கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை  மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது,  வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டுப் பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதைப் படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும்  கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டினார்கள். முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.