Skip to main content

“புதிய அரசு பொறுப்பேற்ற பிறகாவது இதைச் செய்தாக வேண்டும்!” - ராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Ramadoss demanding for full lockdown to control corona virus in tamilnadu

 

இந்தியா முழுக்க கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. பல இடங்களில் படுக்கைகளும், ஆக்ஸிஜனும் கிடைக்காமல் பெரும் இன்னலுக்குள்ளாகும் நிலை இருந்துவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், “தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கரோனா பரவல் 20,952 என்ற புதிய உச்சத்தை நேற்று எட்டியுள்ளது. கரோனா பரவல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 750% அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் கவலை அளிக்கிறது.

 

சட்டப்பேரவைத் தேர்தலின் போது பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இப்போது ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழகத்தின் தினசரி கரோனா தொற்று 2,817 மட்டும் தான்; சென்னையில் இந்த எண்ணிக்கை 1,083 ஆக இருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சென்னையில் 6150 ஆகவும், தமிழகம் முழுவதும் 20,952 ஆகவும் அதிகரித்துள்ளன. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேர்தலுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், குடிப்பகங்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டுமே அனுமதி, கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிகம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்பது தான் எதார்த்தம்.

 

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை பரவிய போது மார்ச் மாதம் 7-ஆம் தேதி தான் தமிழகத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அது ஜூலை மாதம் 27-ஆம் தேதி 6,993 என்ற உச்சக்கட்டத்தை அடைய ஏறக்குறைய 150 நாட்கள் ஆயின. அதற்கு காரணம் மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து  தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கும், மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வும் தான். ஆனால், இப்போது மார்ச் மாதத் தொடக்கத்தில் 400 என்ற அளவில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 60 நாட்களில் 21,000 என்ற இமாலய எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இதற்குக் காரணம், அரசியல் சூழலால், போதிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது தான். இனியாவது முழு ஊரடங்கு போன்ற கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கரோனாவைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாகி விடும். இப்போதே ஆக்சிஜன், ரெம்டெசிவிர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தினசரி உயிரிழப்பும் 150-ஐ கடந்து விட்டது. கரோனா பரவல் சூழலின் தீவிரத்தை இனியும் முழுமையாக உணர்ந்து கொள்ளாவிட்டால், வட மாநிலங்களைப் போன்ற சூழலை தவிர்க்க முடியாது.

 

முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால் மாநில அரசுக்கும், தொழில் மற்றும் வணிகத்துறைக்கும் ஏற்படும் பொருளாதார இழப்பையும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்பையும் நான் நன்றாக அறிவேன். ஆனால், குறித்த காலத்தில் இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், கரோனாவுக்கு ஏராளமான உயிர்களை இழக்க வேண்டியிருப்பதுடன், நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் போகும் போது ஏற்படும் சூழலால் இன்னும் மோசமான பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும்.

 

தில்லி, உத்தரப்பிரதேசம், மராட்டியம், கர்நாடகம், ஹரியானா, கோவா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர்  ஆகிய 7 மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கேரளா, ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சுமார் 10 மாநிலங்களில் தமிழ்நாட்டை விட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. பொருளாதார இழப்புகள் பெரிதா? உயிரிழப்புகள் பெரிதா? என்றால் உயிரிழப்புகள் தான் பெரிது எனக் கருதி அதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதார இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்து கொள்ளலாம். ஆனால், உயிரிழப்புகளை மீட்டெடுக்க முடியாது. எனவே, தமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு என்ற கசப்பான முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பொறுப்பேற்ற பிறகாவது இதைச் செய்தாக வேண்டும்.

 

முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்தி விட முடியும். ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் ஏழை - நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை அரசு தான் ஈடுகட்ட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதற்கான செலவில் சரி பாதியை மத்திய அரசிடம் போராடிப் பெறவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மற்றொருபுறம் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அம்மாவட்டங்களுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்கி நோயாளிகளைக் காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.