Skip to main content

ரசிகர்களுக்காக சிந்தித்த ரஜினி! விழாவை எளிமையாக்கிய தீவிர ரசிகர்!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

rajini fans club function for providing  welfare assistance 

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் மனிதம் காத்து மகிழ்வோம் என்ற நிகழ்ச்சி பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிகழ்ச்சியானது திடீரென ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிக எளிமையான முறையில் நிகழ்வு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்து முடிந்துள்ளது.

 

2018 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்தபோது, ரஜினி மக்கள் மன்றத்தில் அதிக அளவு உறுப்பினர்களைச் சேர்த்தனர். 2020ல் அரசியலுக்கு இனி எப்போதும் வரப்போவது இல்லை எனச் சொன்னதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு போயினர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 95 சதவீதத்தினர் வேறு கட்சிகளுக்கு போகவில்லை.

 

இந்நிலையில், வறுமையில் வாடும் ரஜினி ரசிகர்களின் குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என கடந்த ஆண்டு முடிவு செய்தார் மா.செ சோளிங்கர் ரவி. வாழ வீடு கூட இல்லாத 5 நபர்களுக்கு, 600 சதுர அடியில் வீடு, 5 பேருக்கு மாவு அரைக்கும் இயந்திரம், 5 பேருக்கு முச்சக்கர ஸ்கூட்டர், ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரம், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம் 5 நபருக்கு, இரண்டு பேருக்கு பெட்டிக்கடை என சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

 

இந்த நிகழ்ச்சியை சென்னையில் நடத்த முடிவு செய்து ரஜினிகாந்திடம் அனுமதி வாங்கி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மனிதம் காத்து மகிழ்வோம் என்கிற தலைப்பை நடிகர்கள் சிவகார்த்திகேயன், லாரன்ஸ், இயக்குநர் கார்திக்சுப்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.  இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

 

நிகழ்ச்சியில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கார்த்திக் சுப்புராஜ், பி.வாசு, ரவிக்குமார், நடிகர் ராகவா லாரன்ஸ், ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ராக்லைன். வெங்கடேஷ் போன்றவர்களோடு பாஜக கூட்டணியில் உள்ளவரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு, அதிமுகவை சேர்ந்த சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாஜக ஆதரவாளர் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் இருந்தன.

 

rajini fans club function for providing  welfare assistance 

 

நிகழ்ச்சிக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்கிற தகவல் கிடைத்தது. இப்போதைய நிலையில் பிரமாண்ட நிகழ்ச்சி வேண்டாம். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல், ரசிகர்களுக்கு வீணான செலவு, நிகழ்ச்சி நடைபெறும் போது, அல்லது வழியில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நன்றாக இருக்காது. யாராவது அரசியல் பேசினால் கூடுதல் சிக்கல் என்பதால் ரஜினி நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துவிட்டார். இது ரசிகர்களை கவலைப்படச் செய்தது.

 

rajini fans club function for providing  welfare assistance 

 

இந்நிலையில், ஒருங்கிணைந்த ரஜினி மன்றச் செயலாளரான ரவியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து அதே மார்ச் 26ஆம் தேதி சோளிங்கரில் வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள் என உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி புதியதாக கட்டப்பட்ட வீடுகளில் குத்துவிளக்கேற்றி வைத்து அந்த குடும்பத்தாரிடம் சாவியை ஒப்படைத்துள்ளனர். அதோடு நலத்திட்ட உதவிகளை சம்பந்தப்பட்ட ரசிகரின் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர். எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!