Skip to main content

ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல்! -தமிழக அரசு விளக்கம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
Purchase of paddy directly from farmers during curfew! Tamilnadu Government Explanation!

 

ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்க முடியாத நிலையில், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், ஊரடங்கு அறிவித்ததும், தோட்டக்கலைத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  10,100 வாகனங்கள் மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.  உழவர் சந்தைகள் மூலம் 1,400  மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுகின்றன.

சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன. காய்கறிகளைப் பாதுகாப்பதற்கு,  குளிர்பதன கிடங்குகளுக்கான வாடகை மே 31 வரை  விலக்களிக்கப்பட்டுள்ளது.  

காய்கறி, பழங்களைப் பதப்படுத்தவும், வினியோகம் செய்யவும், 482 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் உணவுச் சங்கிலி மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு தள்ளிவைத்துள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.