Skip to main content

அரசு பள்ளியை தத்தெடுக்கும் கல்வி காவலர்கள் !

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

காவல்துறை என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனிப்பட்ட பார்வை இருந்துவரும் நிலையில் அதை முறியடிக்கும் வகையில் சில காவலர்கள்
செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் உண்மையே.

 

puliyanthope police officers adopt school

 

 

அந்த வகையில் புலியந்தோப்பு காவல் ஆய்வாளர் கே. கிருஷ்ணமூர்த்தி புலியந்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்த சில தினங்களிலே பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்துள்ளார். 

புலிந்தோப்பு, நடுத்தர மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், அரசுப் பள்ளியை நோக்கி பயணிக்கும் குழந்தைகள் பெரும்பாலானோர் ஏழை எளியோரின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகள் வளரும் சூழ்நிலைதான் அவர்களின் வருங்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில், புலியந்தோப்பு நடுநிலைப்பள்ளி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை கண்ட புலியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஹெலனைச் சந்தித்து அந்த பள்ளியை தத்தெடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். 

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பள்ளி உட்புற, வெளிப்புற சுவர்கள் , கழிவறை ஆகியவை சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டன. பின்னர் கழிவறைகளுக்கு தேவையான கதவுகள் அமைத்து 20.11.2019 தேதி அன்று சென்னை வடக்கு கூடுதல் ஆணையாளர் ஆர். தினகரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. மாணவர்கள் அமரும் வகையில் மேசை, மின் விசிறி, காலணிகள், துணி, குடிநீர் வசதி, கேரம் பேர்டு, செஸ் போர்டு, கைபந்து, கிரிக்கெட் பேட் போன்ற விளையாட்டுப்பொருட்கள் ஆகியவற்றையும் பள்ளிக்கு வழங்கினார்.

இது தொடர்பாக பேசிய வடக்கு கூடுதல் ஆணையாளர் தினகரன், "வட சென்னை மக்கள் என்று சொன்னாலே ஒரு பொது பார்வை இருக்கிறது. அதை மாற்றவேண்டும் என்றால் அது கல்வியால் மட்டுமே முடியும். அந்த கல்வியோடு மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் ஊட்டும் போது
மாணவர்களின் மனநிலை மாற்றம் அடையும். தவறான பாதைக்கு போகாமல் தடுக்கப்படுவார்கள். அந்த அடிப்படையிலேயே இதை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் இதனால் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்