Skip to main content

வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

Pudukottai - Married Women - Incident

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஆயிங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவருக்கும் மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த சுதாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்யப்பட்டு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

 

நேற்று முன்தினம் திடீரென சுதா வீட்டிற்குள் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். இது குறித்து சுதாவின் தந்தை வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சுதாவின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து சுதாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலிசார் வழக்குப் பதிவு விசாரனை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுதாவின் உடலை அவரது சொந்தங்கள், ஆயிங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள குடியிருப்பிற்கு கொண்டு வந்தனர். அங்கே, பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் சுதாவின் சடலத்தை கணவர் ராஜகோபால் வீட்டிற்கு எதிரில் குழிதோண்டி புதைத்துவிட்டனர். அப்போதே ராஜகோபால் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பாதுகாப்பிற்கு நின்ற போலிசார் சொல்லியும் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் இன்று வெள்ளிக் கிழமை மதியம் ராஜகோபால் உறவினர்கள் மற்றும் ஆயிங்குடி வடக்கு கிராமத்தினர் அறந்தாங்கி கோட்டாட்சியர் முருகேசனிடம் குடியிருப்புப் பகுதியில் வீட்டின் எதிரில் புதைக்கப்பட்டுள்ள சடலத்தைத் தோண்டி எடுத்து இடுகாட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

புகாரை வாங்கிய கோட்டாட்சியர் உடனே வருவாய் மற்றும் காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்றபோது சுதாவின் உறவினர்கள் சடலத்தைத் தோண்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு சடலம் தோண்ட ஆள் இல்லாததால் சுதாவின் கணவர் ராஜகோபால் மற்றும் சிலர் தோண்டி சடலத்தை எடுத்தனர். சந்தேக மரணம் என்பதால் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் அதிகாரிகள் முன்னிலையில் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

இது குறித்து சுதாவின் பெற்றோர் தரப்பில் கூறும் போது. சுதாவின் இறப்பு தற்கொலை இல்லை. அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும். அதனால் ராஜகோபால் உள்ளிட்ட இதற்கு உடந்தையாக இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், சுதாவின் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சொத்துகளை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

அதே போல ராஜகோபால் உறவினர்கள் கூறும் போது.. சுதாவை யாரும் கொலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகளை முழுமையாக ராஜகோபால் பராமரிப்பார் என்று கூறுகின்றனர். போலிசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். வழக்கு விசாரனையின் முடிவில் இது கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தின்  கிராமங்களில் இது போல பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி வீட்டிற்குள், வீட்டு வாசலில் சடலங்களைப் புதைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தச் சம்பவம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆயிங்குடி வடக்கு கிராமத்தில் மீண்டும் வீட்டின் அருகில் உடலைப் புதைக்கும் சம்பவம் தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.