Skip to main content

அடக்கம் செய்யப்பட்டது புதுக்கோட்டை மீனவரின் உடல்! அமைச்சர் நேரில் அஞ்சலி! 

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Pudukottai fisherman's body buried Minister  Tribute to in person!

 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 118 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில் ஒரு படகில் ராஜ்கிரண், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 

 

இந்த நிலையில், 19ஆம் தேதி அதிகாலை ஆழ் கடலில் வைத்து இலங்கை கடற்படையின் கப்பல் ராஜ்கிரண் ஓட்டிச்சென்ற படகின் மீது மோதியதில் மூவரும் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர். இதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ராஜ்கிரண் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது.

 

இந்த தகவல் அறிந்து கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. அவரது உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அத்தோடு கைது செய்யப்பட்ட மற்ற இரு மீனவர்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார். கைது செய்யப்பட்ட மற்ற இரு மீனவர்கள் குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம் வழங்கினார். தொடர்ந்து மூன்று நாட்களாக இலங்கை அரசு சடலத்தைக் கொடுப்பதாக அறிவித்து ஆனால் ஒப்படைக்காமலேயே இருந்தது. 

 

Pudukottai fisherman's body buried Minister  Tribute to in person!

 

இந்நிலையில், இன்று (23ஆம் தேதி) அதிகாலை இந்திய கடற்படையிடம் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பதினோரு பேர் ஆழ்கடலுக்குச் சென்று ராஜ்கிரண் உடலை பெற்று கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கரையில் வந்து சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆகியோர் அஞ்சலி செலுத்தி தமிழக அரசு அறிவித்திருந்த ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை ராஜ்கிரணின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.

 

Pudukottai fisherman's body buried Minister  Tribute to in person!

 

சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ராஜ்கிரணின் உடல், ஆம்புலன்சில் ஊர்வலமாக மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கதறியழுத பலரும் மயக்கமடைந்து தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதேபோல தொடர்ந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் படகுகளை உடைத்து மூழ்கடித்துக் கொல்லப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு இந்திய அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்திய மீனவர்கள் கொல்லப்படும் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று அங்கு வந்திருந்த மே 17 இயக்க திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.