Skip to main content

கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை! 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

pudukkottai district women incident police investigation

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மனைவி கோகிலா. இவர்களுக்கும், அதே பகுதியில் உள்ள சிலருக்கும் பாதை பிரச்சனை  இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதைப் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணையன் என்பவர் கொடுத்த புகாரில் கோகிலா மற்றும் சிலர் மீது கீரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கோகிலா உள்பட 2 பெண்களை அதிகாலையில் சென்று கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார். இதையடுத்து, இரு பெண்களும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர். 

 

இந்த நிலையில், இன்று (01/10/2022) காலை கோகிலா, அவரது வீட்டில் சேலையில் தூக்கில் சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டுத் தாளில் எழுதப்பட்ட கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், "பாதை பிரச்சனை சம்மந்தமாக மேற்பனக்காடு தி.மு.க. பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனா (காவலர்) ஆகியோர் தூண்டுதலின் பேரில் கீரமங்கலம் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயக்குமார், பெண் காவலர் கிரேசி ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். 

 

இதனால் எனது கணவரும் வீட்டிற்கு வராமல் வெளியில் இருக்கிறார். குழந்தைகள் அப்பாவை கேட்டு அழுகிறார்கள். இந்த மன உளைச்சல் எனக்கு அதிகமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.

pudukkottai district women incident police investigation

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குடி காவல்துறை டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாஸ்கரன், அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய பாதையை அமைத்துக் கொடுத்ததுடன், கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரின் பேரில் எம்.எம்.குமார், புவனா, உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், பெண் காவலர் கிரேசி, கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் கீரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட  பா.ஜ.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்டவர்ளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஐந்து மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. இதனால் முன்னெச்சரிக்கை நடவ்டிக்கையாக, சுமார் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வஜ்ரா வாகனத்துடன் குவிக்கப்பட்டிருந்தனர்.

pudukkottai district women incident police investigation

இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை கேட்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை விசாரணையை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.