Skip to main content

மகளைக் கொன்று சிறைக்குச் சென்ற தந்தை... மர்மமாக இறந்த தாய்... ஆதரவற்று நின்ற பெண்குழந்தைகள்... ஆதரவு கரம் நீட்டிய போலீஸார்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

pudukkotai district police childrens foods and accommodation arranged


புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்குச் சென்ற நிலையில் அவரது தந்தை பன்னீர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மூக்காயி, அவர்களின் உறவினர் குமார் ஆகியோர் சிறுமியைக் கொன்று விட்டு நாடகமாடியுள்ளனர். 

 

அவர்களின் நாடகத்தை அறிந்த போலீஸார் பன்னீர் மற்றும் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது நரபலிக்கான தடயங்களும், சம்பவங்களும் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும் இன்னும் நரபலியாகவே சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் தான் பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி அருகே உள்ள வடுதாவயலில் தனது இரு பெண் குழந்தைகளுடன் தங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் 30- ஆம் தேதி மர்மமான நிலையில் இறந்ததால் அவரின் 2 பெண்குழந்தைகள் மூக்காயின் வயதான அம்மாவின் அரவணைப்பில் இருந்து வந்தனர். 

 

மகளும் இறந்துவிட்டாள், மருமகனும் சிறையில் இருக்கும் நிலையில் தன் அரவணைப்பில் இருந்த 2 பேரக் குழந்தைகளான பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு, வாழ்வாதாரம் இல்லாமல் தானும், குழந்தைகளும் உணவில்லாமல் வாழ வழியின்றி மூதாட்டி மற்றும் குழந்தைகள் கஷ்டப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். 

 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி காவலர்களுடன் வடுதாவயல் கிராமத்திற்குச் சென்று வயதான பாட்டிக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியதுடன் தந்தையும், தாயும் செய்த தவறால் ஆதரவும், உணவும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் குழந்தைகளை அழைத்து வந்த போலீஸார் சமூக நலத்துறை கண்காணிப்பில் இயங்கும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் படிப்பிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

 

போலீஸாரின் செயலைப் பார்த்த பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் மற்றும் தாயுள்ளத்தோடு அழைத்து வந்து காப்பகத்தில் சேர்த்த போலீஸாரையும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.