Skip to main content

புதுச்சேரி- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

மத்திய அரசு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 112  இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுக்காக வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

protest


இந்நிலையில் மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தொடங்கி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை வரை நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.

protest


இந்த மனித சங்கிலி போராட்டத்தில்  காங்கிரஸ் மாநில தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தி.மு.க (தெற்கு) மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, (வடக்கு) மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும்   காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கைகோர்த்து நின்றபடி ஹைட் ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

போரட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,

protest


“ புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. உடனே நான் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பிரதமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் அனுப்பினேன். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெட்ரோலியதுறை மந்திரி அலுவலகத்தில் இருந்து எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாம் அனுப்பிய கடிதத்தை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். புதுவை மாநிலத்தில் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் தொடங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

மாநில அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே புதுவையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியும். எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் எனக்கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.