Skip to main content

புதுச்சேரி மத்தியச் சிறையில் பெண் கைதிகளுக்குப் பாதுகாப்பில்லை; தனிச்சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

pudhuchery central jail

 

புதுச்சேரி மத்தியச் சிறையில் உள்ள பெண்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில்லை என்றும், போதிய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும், புதுச்சேரி உத்திரவாகினிப் பேட்டையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் வி.பீமராவ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். 
 

அவரது மனுவில், பெண்களுக்கான சிறையில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதாகவும், அவர்கள் உறங்குவதற்கு தேவையான படுக்கைவசதிகள் இல்லாததால், தரையில் உறங்க வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டப்படி, புதுச்சேரி பெரிய காலாப் பேட்டையில் 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் மத்தியச் சிறையில், தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், பெண் கைதிகள் என மூன்று பகுதிகளாக அமைக்கப்படவில்லை.

 

ஆனால், அதற்கு மாறாக, தண்டனைக் கைதிகளுக்கு ஒரு பகுதி, விசாரணை மற்றும் பெண் கைதிகளுக்கு மற்றொரு பிரிவு என இரண்டு மட்டுமே ஒதுக்கப்பட்டடுள்ளது. இரண்டாவது பிரிவில் உள்ள பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூம்களில் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. பெண்களுக்குத் தனி மருத்துவமனை இல்லை. அடிப்படைத் தேவைகளுக்கும் கூட ஆண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தாண்டி, பொதுப்பாதை வழியாகச் செல்லும் நிலைக்கு பெண் கைதிகள் தள்ளப்பட்டுள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.  
 

சிறைக்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் ஒரே வழி அமைக்கப்பட்டுள்ளதால், ஆண் கைதிகளின் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்குப் பெண் கைதிகள் ஆளாகின்றனர். பழைய சிறைச்சாலை கட்டிடம் காலாவதியாகிவிட்டதால், அதை இடிக்க வேண்டுமென முடிவெடுத்துத்தான், புதிய சிறைச்சாலை கட்டப்பட்டது. ஆனால், பழைய கட்டிடம் இடிக்கப்படவில்லை.  
 

எனவே, புதுச்சேரி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களை, உடனடியாக தனியாகப் பிரிப்பதற்கும், அடிப்படை வசதிகளுடன் கூடிய தனிச் சிறையில் அவர்களை அடைப்பதற்கும், புதுச்சேரி அரசு தலைமைச் செயலாளர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

 

http://onelink.to/nknapp

 

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் இரண்டு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.