Skip to main content

பள்ளி வயதில் குடும்ப பாரம் சுமக்கும் சிறுமியின் தாய்க்கு மனநல ஆலோசனைகள்... ஆட்சியர் உத்தரவில் மருத்துவர் வழங்கினார்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Psychiatric counseling for the mother of a school age girl carrying a family burden ..

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் மனநலம் பாதித்த தாயோடு மண் குடிசையில் வசிக்கும் பள்ளிச் சிறுமி சத்தியா குடும்ப பாரத்தைப் போக்க விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வந்தார். மன தைரியத்தோடு குடும்ப பாரம் சுமக்கும் சிறுமியின் நிலை, அவரது படிப்பு மற்றும் வீடு போன்றவற்றிற்கு அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இந்த செய்தியை முதன் முதலில் செப்டம்பர் 3 ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோவாக வெளியிட்டோம்.

செய்தி வெளியான நிலையில் சிறுமிக்காக உதவ பல நல் உள்ளங்கள் முன்வந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 4 ஆம் தேதி காலை ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் சத்தியா வீட்டிற்குச் சென்று வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் சிறுமியை நேரில் சந்தித்து 'உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று தைரியம் கொடுத்து பல உதவிகளையும் செய்தார். அந்த உதவிப் பொருட்களை கூட வைக்க இடமின்றி மழைக்கு ஒழுகும் மண் குடிசையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மக்கள் பாதை அமைப்பினர் தொடர்ந்து சத்தியா குடும்பத்திற்கான உதவிகளை செய்து வரும் நிலையில், இன்று 5 ந் தேதி சத்தியாவின் தாய்க்கு மாற்றுத்திறனாளி சான்று வாங்குவதற்காக கந்தர்வகோட்டை அழைத்துச் சென்று சான்று பெற்றனர்.

 

Psychiatric counseling for the mother of a school age girl carrying a family burden ..


இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் சத்தியாவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயிடம் நீண்ட நேரம் பேசி ஆலோசனைகள் வழங்கினார். அதோடு, அவரது ஆழ்மன துயரங்களை வெளிக்கொண்டு வந்து சகஜ நிலைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். தொடரந்து அவருக்குத் தேவையான ஆலோசனைகளும் மருந்துவ உதவிகளும் தேவைப்படுகிறது. அதனால் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

மேலும் சத்தியாவிடம் மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தனை மாறியதால் தான் 10 ஆம் வகுப்பை விட 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்துள்ளது என்று பல்வேறு உளவியல் ஆலோசனைகள் வழங்கினார்.

 

Ad


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சத்தியா குடும்பத்தின் மீது தனிக்கவணம் செலுத்தி அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்த்து கண்கலங்க சத்தியா மற்றும் உறவினர்கள் நன்றி கூறினார்கள்.

சிறுமி சத்தியா கூறும்போது.. என்னையும், என் குடும்பம் பற்றியும் அறிந்து, ஒழுகும் குடிசையில் வாழ்வதைப் பார்த்து 'மக்கள் பாதை' அமைப்பினர் உதவிகள் செய்தனர். தொடர்ந்து நக்கீரன் போன்ற ஊடகம் என் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியதால் இன்று உலகம் எங்கும் உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை நாங்கள் இருக்கிறோம் என்பது தான். அதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ஒரு தாத்தா பேசும் போது அழுதுகொண்டே பேசினார் நானும் அழுதுவிட்டேன். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று அந்த தாத்தா சொன்னது ரொம்ப ஆறுதலாக இருந்தது. பலரும் ஆறுதலாகப் பேசியதே எனக்கு நிம்மதியும், பலத்தையும் கொடுத்திருக்கிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.