Skip to main content

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி போராட்டம் - பெ. மணியரசன் அறிவிப்பு!   

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

Struggle to nationalize Isha Foundation-P. Maniyarasan announcement!

 

"ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.

 

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சத்தியபாமா (நிறுவனர் - சத்தியபாமா அறக்கட்டளை), வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் (சென்னை உயர் நீதிமன்றம்), மோகனசுந்தரம் சுவாமிகள் (திருவில்லிப்புத்தூர் தெய்வத்தமிழ் ஆன்மீகர்), இறைநெறி இமயவன் (தெய்வத்தமிழ்க் கூடல், குடந்தை), கலையரசி நடராசன் (தலைவர், சைவத் தமிழ்ப் பேரவை, ஆவடி), வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன் (கரூர் சித்தர் ஆன்மிகக் கூட்டமைப்பு), ஆசீவக சுடரொளி (ஆசீவகம் – சமய நிறுவனம்), பொன்னுச்சாமி அடிகளார் (தேனி மாவட்டம்), கி. வெங்கட்ராமன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்), அரங்கநாதன் (அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்), முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (வள்ளலார் ஆய்வாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் - 1

 

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா அறக்கட்டளையும், அவ்வளாகத்தில் உள்ள இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மிகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவநெறி - திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன. ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைத் தொடர்களை ஆக்கிரமித்துவிட்டார் என்ற புகார்களும் இருக்கின்றன.

 

ஈஷா மைய வளாகத்தில் நிறுவப்பட்டு வழிபாடு நடக்கும் தியான லிங்கம் கோயில் மற்றும் ஆதியோகி என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை ஆகியவை இந்து மற்றும் சைவ நெறிகளுக்கும், ஆகம விதிகளுக்கும் புறம்பான வகையில் அமைந்திருக்கின்றன.

 

இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of Tamil Nadu - Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தது.

 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது.

 

தமிழ்நாடு அரசு, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை ஒட்டியுள்ள 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் இருப்பதாகவும், அவற்றை இடித்துவிட்டு, அந்த நிலங்களை உரிய மலைவாழ் பழங்குடி மக்களிடம் திரும்ப அளித்துவிட வேண்டும் எனவும் ஆணையிட்டது. அவற்றை ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் கிஞ்சித்தும் மதிக்கவில்லை என்பதை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

 

இவை தவிர, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் “காவிரி கூக்குரல்” (Cauvery Calling) என்ற பெயரால் நிதித் திரட்டியதில் மோசடி நடந்திருப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது (Writ Petition No 43414/2019 (GM-PIL)).

 

இவ்வாறு பலவாறான சமய நெறி மீறல்களும், சட்டமீறல்களும் நடத்திவரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் - 2

 

இந்து அறநிலைத்துறையைக் கலைக்கும் ஜக்கி வாசுதேவின் முயற்சிக்குக் கண்டனம்!

 

ஜக்கி வாசுதேவும் வேறு சில ஆதிக்க சக்திகளும் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக்கொள்ளும் உள்நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத்துறையைக் கலைக்கக் கோரி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் நிர்வாகங்களிடம் அனுமதி பெறாமல், அத்துமீறி (Trespass) திருக்கோயில்களின் சன்னிதானங்களுக்கு முன்பாக ஆண்கள் – பெண்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்துள்ளார் ஜக்கி வாசுதேவ். இது சட்டவிரோதச் செயல்!

 

ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

சற்றொப்ப நூறாண்டுகளாக இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்து மதத்தின் தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் அதன் பன்மைத்தன்மை ஆகும். பல்வேறு தெய்வங்கள், பல்வேறு புனித நூல்கள் கொண்ட நம்முடைய மதத்தின் நிர்வாகத்தை ஏதோவொரு தனியார் குழுவிடம் ஒப்படைக்க முடியாது. திருக்கோயில்கள் பெரும்பாலும் பழங்காலத்தில் அரசர்களால் எழுப்பப்பட்டவை. எனவே, இக்கோயில்களை நிர்வாகம் செய்ய தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறை மிகமிகத் தேவை.

 

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அறநிலையத் துறையையே கலைத்துவிட வேண்டும் என்பது வர்ணாசிரம ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும்.

 

எனவே, தமிழ்நாட்டு இந்து மக்கள் அனைவரும் இச்சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஜக்கி வாசுதேவ் முன்மொழிந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி வழிமொழிந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்று தெய்வத் தமிழ்ப் பேரவை கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் - 3

 

தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் அன்றாட பூசைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்!

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் விதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அன்றாடப் பூசைகளும், வழிபாடுகளும் தமிழ்வழியில் நடைபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தாலும், அதற்குரிய மந்திர நூல்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும் பெரும்பாலான கோயில்களில் அன்றாட பூசைகள் தமிழ் வழியில் நடத்தப்படுவதில்லை.

 

இந்த விதிமீறல் தொடரக் கூடாது எனத் தமிழ்நாடு அரசைத் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. சமற்கிருதத்தில் பூசை நடத்த வேண்டுமெனக் கோருவோரைத் தவிர, இயல்பாக நடக்கும் அனைத்துப் பூசை மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ்த் திருமுறைகளையும், மந்திரங்களையும் மட்டுமே பயன்படுத்துவதை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நடைமுறை வழக்கமாக்கிட உறுதி செய்ய வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

 

உண்ணாப்போராட்டம்

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆன்மிகர்கள் - அடியார்கள் - தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்புடன் - தஞ்சையில் வரும் 08.05.2021 – சனிக்கிழமை நாளன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை - கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி, ஒருநாள் வேண்டுகோள் உண்ணாப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கர்நாடகத்துக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்'-பெ.மணியரசன் பேட்டி

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

தமிழ்த் தேசிய பேரியக்க மாநில தலைவர் பெ.மணியரசன் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''மேட்டூர் அணையில் நீர்மட்டம் 77 அடி குறைந்துள்ளது வேதனையாக உள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலை மாதம் திறந்துவிட வேண்டிய 31.24 டிஎம்சி நீரும் திறந்து விடப்படவில்லை. கர்நாடகம் தங்களுக்கு நீர் போதவில்லை கூறுகின்றனர். தற்போது அளவில் உள்ள நீர் விகிதாசார அடிப்படையிலாவது நீர் திறந்து விடப்பட வேண்டும், எனவே தமிழக அரசு கர்நாடகத்திற்கு வல்லுநர் குழுவை அனுப்பி இருக்கின்ற நீரை பகிரக் கர்நாடக அரசை வற்புறுத்த வேண்டும். தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர் பாழாகி உள்ளது. தோழமை கட்சியான காங்கிரஸை, திமுக கர்நாடக அரசிடம் பேசி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகத்துக்கு எதிராகப் பொருளாதார தடையை தமிழக அரசு விதிக்க வேண்டும்.

 

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணைய தலைவர் ஹல்தர் அணை கட்ட கர்நாடக அரசின் ரூ.9 ஆயிரம் கோடி செலவிலான திட்ட அறிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் துறைக்கும், காவிரி நிதி நீர் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயரளவிற்கு டெல்லி சென்று மனு அளித்து வந்துள்ளார். கடந்த காலங்களில் கர்நாடக அரசு பல அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை தடுத்துள்ளது. தற்போது 66 டிஎம்சி அளவிலான மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராது, காவிரி பாலைவனமாக மாறிவிடும். அதைத் தடுக்க காவிரி பங்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்தி தமிழக அரசு தடை பெற வேண்டும்.

 

பொது சிவில் சட்டத்தை, பாஜக அரசு கொண்டு வருவதால் அச்சம் உள்ளது. இந்துக்களை ஒன்றாகத் திரட்டும் தந்திரமாகத் தெரிகிறது. சட்டம் குறித்து முழு விவரம் தெரிவிக்காமல் மக்களிடையே கருத்து கேட்பது சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. திருமண வயது, திருமண முறிவு, வாரிசுரிமை போன்றவற்றில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவைதான், எனவே பாஜக அரசு சட்டம் பற்றிய முன்மொழிவுகளை மக்கன் முன் விவாதத்தற்கு முன் வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அச்சட்டத்தை ஏற்க விரும்புவோர் ஏற்றுச் செயல்படுத்தலாம். ஏற்க விரும்பாதோர் அவர்களின் மத வழக்கப்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என விருப்பத் தேர்வு உரிமை இருக்க வேண்டும்.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதை விட, அவரது ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி, சுவிஸ், கனடா போன்ற கூட்டாட்சி நாடுகளில் மாநில சட்டப்பேரவையை கலைக்கும் அதிகாரம் கூட்டாட்சிய மைய அரசுக்கு இல்லை. எனவே சமத்துவமான மாநில உரிமைகளைக் கொண்ட உண்மையான கூட்டாட்சியாக மாற்ற புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவிற்கு தேவை. மேற்கொண்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முழுவதும் பரப்புரையை ஆகஸ்ட் மாதம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம்'' என்றார்.

 

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், துணைப் பொதுச்செயலாளர் க.அருண்பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.