Skip to main content

தலைமைச் செயலாளராக 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி அவர்களை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளித்திருக்கிறது தமிழக அரசு. இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.  

 

தமிழக அரசில் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரகுமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத்ராம் சர்மா, பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கோபால் ஆகிய 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதன்மைச் செயலாளர்களாக இருக்கின்றனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராக ராஜேந்திரகுமார், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சேவைத்துறையின் முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகவும் முதன்மைச் செயலாளராகவும் ராஜேஷ் லக்கானி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக மங்கத்ராம் சர்மா, தமிழக நெடுஞ்சாலைத் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளராக குமார் ஜெயந்த், தமிழக போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலாளராக கோபால் ஆகியோர் தற்போது பணியில் உள்ளனர். 

 

இவர்கள் அனைவரும் 1992 ஆம் வருடம் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வாகி தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தமிழக அரசில் பணியில் இணைந்தனர். முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த இவர்களுக்கு தற்போது தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினிடம் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி நேற்று (23.12.2022) தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை பிறப்பித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.

Next Story

நிவாரணத் தொகை வழங்கும் பணி; அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர்  அறிவுரை

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
The work of granting relief; Chief Secretary Advice to Government Officers

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை பருவத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரு தினங்களில் பெய்த அதிகனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகையாக 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கு, குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணைகள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் ஆணையாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (28.12.2023) முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி இப்பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

இப்பணியில் குறைபாடுகள் ஏதுமின்றி உரிய தேதிகளில் கூட்ட நெரிசல் இன்றி, அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை பெறும் வகையில் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம், 26.12.2023 முதல் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து, அட்டைதாரரின் வீடுகளில் நேரடியாக டோக்கன்கள் வழங்கப்பட்டன. 29.12.2023 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் குறித்த நேரத்தில் குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைகளுக்கு வருகை தந்து அவர்களுக்குரிய நிவாரண உதவிகளைப் பெற்றுச் செல்லலாம்.

இந்த நிவாரணத் தொகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில் அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிட ஏதுவாகத் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசி மாவட்டத்திற்கு 04633-290548 எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 04652-231077 எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைகள் 26.12.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.

மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறை அலுவலகப் பணி நேரத்தில் செயல்படும். பொதுமக்களுக்கு வெள்ள துயர் துடைக்கும் நோக்குடன் வழங்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிலையில், பொதுமக்கள் இப்பணிக்கு போதுமான ஒத்துழைப்பு நல்கி நிவாரணம் பெற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. என அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.