Skip to main content

அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்வதில் சிக்கல்; திட்டமிட்ட குளறுபடியா?

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

Problems in registering postal votes for civil servants


சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சேலம் சோனா கல்லூரியில் இன்று (மார்ச் 27) பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் மொத்தம் 1,800 பேர் கலந்துகொண்டுள்ளனர். 

 

மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் பயிற்சிக்கு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகள் இன்று காலை முதல் பெறப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்குத் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 

 

தபால் வாக்குகளைச் சேகரிக்க, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு கம்பார்ட்மெண்ட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 2.30 மணி நிலவரப்படி, 50 சதவீதம் பேர் கூட தபால் வாக்களிக்க முடியவில்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

 

குறிப்பிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து அதிகமான ஊழியர்கள் வந்துள்ள நிலையில், அவர்களுக்கும் ஒரே ஒரு கம்பார்ட்மெண்ட் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயிற்சிக்கு வந்திருந்த அரசு ஊழியர்கள் நம்மிடம் பேசினர்.

 

''வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், நிலை அலுவலர் 1, 2, 3 என குறைந்தபட்சம் நான்கு அதிகாரிகள் பணியாற்றுவார்கள். 1,059 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 

 

வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஊழியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சி முகாம் நடந்து வருகிறது. சேலம் மேற்கு தொகுதியில் பணியாற்ற, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் சுமார் 1,800 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி முகாமிற்கு வந்துள்ளனர். 

 

இவர்கள் தபால் முறையில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், போதிய கம்பார்ட்மெண்டுகள், வாக்குப்பெட்டிகள் வைக்கப்படாததால் குறித்த நேரத்தில் எங்களால் வாக்களிக்க முடியவில்லை. 

 

தனித்தனியாக 5 வரிசைகளில் காலை முதல் கால்கடுக்க காத்துக்கிடக்கிறோம். மதியம் 2.30 மணி ஆகியும் எங்களில் 50 சதவீதம் பேர் கூட தபால் வாக்களிக்க முடியவில்லை. அதிகமான அரசு ஊழியர்கள் வந்துள்ள தொகுதிகளுக்கு மட்டும் வாக்களிக்க வசதியாக கூடுதல் கம்பார்ட்மெண்ட்டுகள் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால், 5 மணிக்குள் 100 சதவீத தபால் வாக்குகள் பெறுவது என்பது கடினம்.

 

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் இதேபோன்ற சிக்கல் நிலவுகிறது. தேர்தல் அதிகாரிகளே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், தபால் வாக்குகளைக் குறைவாக பதிவுசெய்ய வேண்டும் என்பதற்காக இப்படி குறைவான கம்பார்ட்மெண்டுகளை ஒதுக்கி அலைக்கழிக்கிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளது'' என்றனர்.

 

இதுகுறித்து உடனடியாக நாம் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமனின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். ''இதேபோன்ற பிரச்சனை வேறு சில தொகுதிகளிலும் இருந்தது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பயிற்சி முகாம் நடைபெறும் இடத்திலும் கூடுதல் கம்பார்ட்மெண்ட்களை வைக்க தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.