Skip to main content

"இது அரசு விழாவா? அதிமுக விழாவா?" - எம்.எல்.ஏ கேள்வியால் பரபரப்பான அரசு நிகழ்ச்சி!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

Problem between admk  and dmk in kanyakumari

 

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று (16.02.2021) குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தக்கலை, குருந்தன்கோடு மற்றும் திருவட்டார் ஒன்றியங்களைச் சேர்ந்த 1,776 பயனாளிகளுக்கும் சேர்த்து 14 கிலோ தங்கம் மற்றும் 7 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகை மற்றும் உதவித் தொகை வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், அதில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்கு கலந்து கொண்டிருந்த அதிமுக மா.செ.க்கள் அசோகன் மற்றும் ஜாண்தங்கம் இருவரும் வழங்கினார்கள்.
 

அப்போது அங்கு இருந்த பத்மனாபபுரம் எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு ஊழியர்கள்தான் பயனாளிகளுக்கு அரசின் உதவிகளை வழங்கவேண்டும். அரசின் உதவிகளை வழங்குவதற்கு அதிமுக மா.செ.க்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது அரசு ஊழியர்களா? இது என்ன அரசு விழாவா? அல்லது அதிமுக விழாவா? எனக் கேள்வி கேட்டு எதிர்ப்பை காட்டினார்.


உடனே, அங்கிருந்த அதிமுகவினரும் மனோ தங்கராஜின் பேச்சுக்கு எதிர்ப்பைக் காட்டி சத்தம் போட்டனர். பின்னர் அங்கிருந்த திமுகவினரும் அதிமுகவினரை சத்தம் போட்டனர். இதனால்  இரு தரப்பினருக்குமிடையே ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்த சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கீழே இறங்கினார்கள். இதையடுத்து பயனாளிகளும் இருக்கையை விட்டு எழுந்தனர். இதனால் அங்கு சத்தமும் சலசலப்பும் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது.


இதைத் தொடா்ந்து அங்குவந்த தக்கலை டி.எஸ்.பி. ராமசந்திரன், இருதரப்பினரையும் சமாதானம் செய்து கடைசியில் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், வலியுறுத்தியதைப் போல் அரசு ஊழியரான சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி பயானாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். அப்போது அதிமுகவினர் ‘ஜெயலலிதா வாழ்க’ என்றும் திமுகவினர் ‘கலைஞர் வாழ்க’ என்றும் கோஷத்தை எழுப்பி கலைந்து சென்றனர். இதனால் அந்த நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.