Skip to main content

“234 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க தயாராக உள்ளது..” - பிரேமலதா விஜயகாந்த்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Premalatha vijayakanth press meet at theni


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலர் திருமண விழாவில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.

 

இந்தத் திருமண விழாவிற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வருகிற சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிமிடம் வரையில், நாங்கள் அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்கிறோம். வருகின்ற, ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அறிவிப்பார். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபட உள்ளோம். கிளைமேக்ஸில் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். 


ரஜினகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து கேட்டபோது, இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், அதன்பின்னர் ஏற்படும் பல சோதனைகள், வேதனைகள் இடர்பாடுகளைக் கடந்து சாதனை படைப்பது மிகுந்த கஷ்டமான காரியம். முதலில் அவர் கட்சி ஆரம்பித்து, பெயர், சின்னம் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும். அதன்பின்னர், பேசுகிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் வெற்றி பெற்று, மக்கள் நலப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம். மக்களுக்கான கட்சி தே.மு.தி.க.

 

தே.மு.தி.க என்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சிதான். டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளும் இறங்கி வரவேண்டும். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வைத்து, அரசியல் செய்யப்படுகிறது. 'நிவர்', 'புரவி' ஆகிய புயல் தாக்கத்தின்போது, தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும், குறையும் உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிர்ப்பலி ஏற்படவில்லை. மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். உணவு வழங்கப்பட்டது என்பது ஆறுதலான விஷயம். அதே நேரத்தில் குறை என்று சொன்னால் போதுமான வடிகால் வசதி இல்லை. நீர்நிலைகள் தூர்வாரப்படாததால், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இதனைச் சரிசெய்யும் கடமை அரசுக்குத்தான் உள்ளது” என்று கூறினார். பேட்டியின்போது மாவட்ட, நகர, ஒன்றியப் பொருளாளர்கள் பலர், உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.