Skip to main content

பிள்ளைகள், பேரன்களை பார்க்க முடியாத சோகம்... வயதான தம்பதி எடுத்த முடிவு!!!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Poompuhar

 

கரோனா ஊரடங்கால், தான் பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் பார்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அவலம் நாகை மாவட்டத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 நாட்களை தாண்டிவிட்டது, சில தளர்வுகளோடு ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் உயிர் பலிகளின் எண்ணிக்கையும், நோய் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோயால் இறப்பவர்களைவிட பசியாலும், உறவுகளை பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணக்கில் வராமலேயே அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று மாவட்டங்களுக்கு இடையே செல்ல முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது. போக்குவரத்து தடையால் வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கும், உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூரில் இருக்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் முடியாத நிலையே இருந்து வருகிறது. இதனால் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகியும், ஆளாகும் நிலையிலும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான அருள்சாமியும், பாக்கியவதியும் தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் கரோனா முடக்கத்தால் பார்க்க முடியாமலும், சரிவர பேச முடியாமலும் பெருத்த மனவேதனையோடு தினந்தினம் நாட்களை நரக வேதனையோடு நகர்த்தியவர்கள், நேற்று இரவு விஷம் குடித்துவிட்டு இருவரும் இறந்துவிட்டனர். இதைக்கண்டு ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் முழ்கியது.

இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி சென்னையிலும், வெளியூரிலும் வசித்து வருகின்றனர். அருள்சாமி தனது மனைவியுடன் சொந்த கிராமத்திலேயே தனியாக வசித்து வந்தார். கரோனா ஊரடங்கால் மூன்று மாதங்களுக்கு மேலாக பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் நேரில் பார்க்க முடியாத சோகத்தில் தவித்திருக்கின்றனர். இனி பிள்ளைகளை பார்க்கவே முடியாது என நினைத்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனை அறிந்த திருவெண்காடு போலீசார் அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிள்ளைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்ட மக்களுக்கும் அதிச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.