Skip to main content

ரேஷன் கடைகள் முன்பு இடையூறாக ஆளுங்கட்சியினரின் பேனர்கள்! - தி.மு.க. தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

pongal gift tn govt dmk party chennai high court

 

பொங்கல் பரிசு டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்ட நிலையில், ரேஷன் கடைகள் முன்பு ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக வழக்கு தொடர அனுமதி கோரி, தி.மு.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, 2,500 ரூபாய், அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கன்களில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும் கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அப்போது தமிழக அரசுத்தரப்பில், இரு மாவட்டங்களில் மட்டும் ஆர்வ மிகுதியால் கட்சியினர் இதுபோல அச்சிட்டுவிட்டதாகவும், அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்மாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கவேண்டும் எனவும், சுற்றறிக்கை பிறப்பிப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் சுற்றறிக்கையும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பின் உத்தரவாதத்தைப் பதிவு செய்து, டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்டது.

 

இந்தப் பின்னணியில், தலைமை நீதிபதி அமர்வில் தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வழக்கு தொடரவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத்தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து, தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி அனுமதியளித்தது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.