Skip to main content

புதுச்சேரி பல்கலையே மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க மா.ச. வலியுறுத்தல்! 

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், விண்ணரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 
 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பல்கலைக்கழகத்தின் இலவச பேருந்து சேவையை நிறுத்திவிட்டு புதுவை மாநில மாணவர்களுக்கு மாநில அரசாங்கமே இலவச பேருந்தை இயக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது பொருத்தமற்றது. இது உள்நோக்கம் கொண்டதாகும். 
 

கல்வி கட்டண கொள்ளை மூலம் நிதி திரட்டுகிற  புதுவைப் பல்கலைக்கழகம் அந்த நிதியை மாணவர்களுக்கே பயன்படுத்த வேண்டும். நிதி சுமையை மாநில அரசிடம் தள்ளிவிடக்கூடாது. தனக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற வேண்டியது ஒரு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமை ஆகும். ஒரு புறம் கட்டணக் கொள்ளை மறுபுறம் மாணவர் சேவைகளை முடக்கி வைப்பது முறையாகாது. 


 

 

மத்திய அரசின் நிதி மறுப்புக் கொள்கைக்கு எதிராக இதுவரை பேசாத மத்திய பல்கலைக்கழக நிர்வாகிகள் நிதி சுமையை மாநில அரசிற்கு மடைமாற்றம்  செய்ய  முயல்வது எந்த விதத்தில் முறையாகும். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பயணிக்கும் பேருந்து சேவையை தொடர்ந்து கட்டணமின்றி  இயக்க வேண்டும், நடப்பு கல்வியாண்டில் உயர்த்தப்பட்ட அநியாய கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்துகிறது.
 

1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு 816 ஏக்கர் விவசாய நிலத்தை புதுவை அரசு இலவசமாக அளித்தது. மேலும் புதுவை அரசு மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை மானிய விலையில் அளித்து வருகிறது. ஆனால் புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழகம் பெரிய அளவில் உதவவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை, அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவில்லை, மாநில வளர்ச்சிக்கு தேவையான பொருத்தமான ஆய்வுகள் மேற்கொள்வதில் உதவவில்லை. 
 

இவ்வாறான சூழலில் மாநில அரசாங்கம் புதுச்சேரி பல்கலை கழகத்துக்காக இலவச பேருந்து இயக்குவது என்பது உண்மை தன்மையை மூடி மறைப்பதாகும். புதுவைப் பல்கலைக்கழகம் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கும், படித்து முடித்த தகுதியான இளைஞர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. 1990களில் நடைபெற்று வந்த பட்டமேற்படிப்பு பிரிவுகளில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு முடிவின்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. புதுவை கென்று தனி பல்கலைக்கழகம் இல்லாத சூழலில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தையே நம்பி இருக்கின்றனர்.

 

university


 

கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கூடிய பட்டமேற்படிப்பு பிரிவுகள் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டாலும், இப்புதிய பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இந்நிலையில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்டப்படிப்பு பிரிவுகளிலும் புதுவை மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடி வந்ததின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு புதுவைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு அனைத்து பட்டமேற்படிப்பு பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. ஆனால் இன்று வரை புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு முடிவு அமல்படுத்தாத  சூழ்நிலை நிலவி வருகிறது. புதுச்சேரி அரசு இதுவரை 2 முறை புதுச்சேரி சட்டமன்றத்தில் இது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றியும் இத்தீர்மானத்தை சற்றும் மதிக்காமல் புதுச்சேரி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
 

 புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு அளித்து வரும் நிதி அளவில் 75 சதமான நிதியை புதுவை பல்கலைகழகத்துக்கு மட்டும் நிதி உதவியாக அளித்து வருகிறது. உண்மை இவ்வாறு இருக்க, புதுவைப் பல்கலைக்கழகமோ நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லத்திற்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கவும், நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும்,  சொகுசு கார்கள் வாங்குவதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது. இந்த வீண் செலவுகளை கடைசியில் கல்வி கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மதிப்பெண் சான்றிதழ் கட்டண உயர்வு, விடுதி கட்டண உயர்வு என மாணவர்கள் தலையில் திணிக்கும் ஒரு எதேச்சதிகார மனநிலையில் புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் செயல்பட்டு வருவதை இந்திய மாணவர் சங்க புதுச்சேரி பிரதேச குழு வன்மையாக கண்டிக்கிறது. இவர்கள் பயணிக்க சொகுசு கார்களை வாங்குவதை விட்டுவிட்டு அந்த பணத்தில் இலவச பேருந்து சேவையை தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.


 

 

மத்திய அரசு அளிக்கும் குறைவான நிதியில் சுமார் 15 லட்சம் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் புதுவை அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. ஆனால் சொகுசு கார்களை வாங்கி ஆடம்பர பவனி வரும் துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் புதுச்சேரி அரசிடம் 1 ரூபாய் மாணவர் சிறப்பு பேருந்தை பல்கலைக்கழகத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது என்பது வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது போல் இருக்கிறது.  புதுச்சேரி அரசிடம் இலவச பேருந்து கோரிக்கையை வைத்துள்ள புதுவை பல்கலைகழகத்துக்கு புதுவை அரசு மற்றும் முதலமைச்சர் அவர்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டில் உயர்த்தப்பட்ட அநியாய கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு நம்புகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய தகவல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Happy news for IPL fans MTC Important Information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நாளை (26.03.2024) நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை  காணவரும் பார்வையாளர்கள், தங்களது  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம் போட்டி முடிந்த பின்பும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட உள்ளது.

Happy news for IPL fans MTC Important Information

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் (Chennai Super Kings Cricket Limited) நிறுவனத்திடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 22.03.2024 அன்று நடைபெற்ற போட்டியின் போது வழங்கிய ஒத்துழைப்பு போல் இந்த போட்டிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.