பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் வாசுகி, ராதிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., "பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர்; எத்தனை பெண்கள் இதில் இறந்துள்ளனர் என்பதை விசாரிக்க வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றவே, கைது செய்த அருளானந்தத்தைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பேருக்கு 10 பேரை கைது செய்வதை ஏற்க முடியாது; பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.