Skip to main content

மகளை காணவில்லை என புகாரளித்த தந்தை... மீட்க சென்றும் மீட்காமல் திரும்பிய போலீஸ்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

the police who went to rescue and returned without rescuing

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது டி.புதுப்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (31). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். அதே நிறுவனத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது திவ்யபிரபா என்பவரும் பணிபுரிந்துவந்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அறிமுகமாகி காதலித்துள்ளனர். இந்த நிலையில், சித்தூர் அருகே உள்ள நாராயண வரம் போலீசில் திவ்யபிரபாவின் தந்தை தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த ஆந்திர போலீசார், விசாரணை நடத்தியதில் திவ்ய பிரபா சென்னையில் தன்னுடன் வேலை செய்த தனசேகருடன் கடந்த மாதம் 24ஆம் தேதி திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் தனசேகரனின் சொந்த ஊரான டி.புதுப்பாக்கத்தில் தங்கியிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து திவ்யாவை மீட்டு ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் தந்தையுடன் நாராயண வரம் போலீசார் நேற்று (25.11.2021) புதுப்பாக்கம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

 

அங்கிருந்த புதுமணத் தம்பதிகள் இருவரையும் அழைத்துச் சென்று திண்டிவனம் தாசில்தாரிடம் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு வேறு மாநில வழக்கு என்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என போலீசாரிடம் திண்டிவனம் தாசில்தார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தனசேகர் - திவ்ய பிரபா ஆகியோரிடம் வாக்குமூலம் மட்டும் பெற்றுக்கொண்டு திண்டிவனத்திலிருந்து அவர்கள் இருவரையும் தனசேகரன் ஊருக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.