Skip to main content

குடுமிப்பிடி சண்டை! பெண் எஸ்.ஐ., காவலர் இடமாற்றம்!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022


 

POLICE SI TRANSFER IN SALEM DISTRICT

 

சேலத்தில், காவல்நிலையத்தில் மோதிக்கொண்ட பெண் எஸ்.ஐ. மற்றும் பெண் காவலர் ஆகிய இருவரும் வெவ்வேறு சப்டிவிஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருபவர் மல்லிகா (வயது 49). இதே, காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலாக சசிகலா (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு, குறிப்பிட்ட ஒரு பணியில் இல்லாத எஸ்.ஐ. மல்லிகா, வாழப்பாடி டி.எஸ்.பி. செல்போனில் அழைத்துக் கேட்டால் நீயும் நானும் சேலம் அரசு மருத்துவமனையில் பணியில் இருப்பதாக பொய் சொல்லும்படி சசிகலாவிடம் கூறியிருக்கிறார். 

 

ஆனால் சசிகலாவோ, தன்னிடம் செல்போனில் விசாரித்த அப்போதைய டி.எஸ்.பி. முத்துசாமியிடம், தான் இரவுப்பணி முடிந்து அதிகாலை 02.30 மணியளவில் வீட்டுக்கு வந்து விட்டதாகவும், தான் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதையறிந்த எஸ்.ஐ. மல்லிகா, தான் சொன்னபடி சொல்லாமல் எதற்காக வீட்டில் இருப்பதாகச் சொன்னீர்கள்? என்று கேட்டு அவரை கடிந்து கொண்டுள்ளார். 

 

இச்சம்பவத்திற்கு அடுத்த நாள் நடந்த 'ரோல்கால்' அணிவகுப்பில், டி.எஸ்.பி. முத்துசாமி, அனைத்து காவலர்கள் முன்னிலையிலும் எஸ்.ஐ. மல்லிகாவை கடிந்து கொண்டுள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு, பெண் காவலர் சசிகலாவுக்கும், எஸ்.ஐ. மல்லிகாவுக்கும் மோதல் வலுத்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதையொட்டி, தொடர்ச்சியாக 2 நாள்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சசிகலா, சங்கீதா ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் சென்ட்ரி பணியில் இருந்த சக காவலரிடம் சொல்லிவிட்டு ஓய்வுக்குச் சென்று விட்டனர். 

 

ஆனால், தன்னிடம் சொல்லாமல் தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டதாக சசிகலா மீது மட்டும், வாழப்பாடி டிஎஸ்பியிடம் மல்லிகா எஸ்.ஐ. புகார் அளித்தார். டிஎஸ்பியின் மிரட்டலுக்குப் பயந்து, அவர் சொன்னபடியே, தான் தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டதாக சசிகலா விளக்கக் கடிதம் எழுதிக் கொடுத்தார். 

 

இச்சம்பவம் நடந்து முடிந்து மூன்று மாதம் கடந்த நிலையில் எஸ்ஐ மல்லிகா, காவலர் சசிகலா மீது மாவட்ட எஸ்பிக்கு கடந்த மே மாதம் ஒரு புகார் அறிக்கை அனுப்பி வைத்தார். அதன் மீது விளக்கம் கேட்டு, சசிகலாவுக்கு காவலர் நடத்தை விதிகள் பிரிவு 3 (அ) &ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு உள்ளது. 

 

இந்த மோதல் குறித்து, நக்கீரன் இணைய ஊடகத்தில் தொடர்ச்சியாக செய்தி வெளியானது. இந்நிலையில், எஸ்ஐ மல்லிகா, காவலர் சசிகலா ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் ஜூலை 5- ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்.ஐ. மல்லிகா, ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்திற்கும், காவலர் சசிகலா, சங்ககிரி காவல்நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ''ஒரு காவல்நிலையத்தில் மோதல் போக்கில் இருந்த இருவரும், வெவ்வேறு சப்டிவிஷன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் பணியில் இருப்பது மொத்தமே நான்கு காவலர்கள்தான். அவர்களைக் கூட சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத ஆய்வாளர் தனலட்சுமியையும் இடமாற்றம் செய்ய வேண்டும். 

 

ஆய்வாளர் தனலட்சுமி, தன்னை மேடம் என்று அழைக்க வேண்டும் என மல்லிகா எஸ்.ஐ.யிடம் சொன்னபோது, அப்படி அழைக்கும்படி அரசாணை இருந்தால் காட்டுங்கள் என்று கிண்டலாக கேட்டுள்ளார். அப்போதே மல்லிகா எஸ்ஐ மீது ரிப்போர்ட் செய்திருந்தால், இன்னொரு பெண் காவலர் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்,'' என்றனர். 

 

ஈகோ மோதலால் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த பெண் எஸ்.ஐ.யும், காவலரும் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.