சங்ககிரி அருகே, மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களையும், கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட் பகுதியில் செப். 27ம் தேதி அதிகாலை 2 மணியளவில், சங்ககிரி காவல்நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள தாபா உணவகம் முன்பு கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட மூன்று கார்கள் நின்று கொண்டிருந்தன. சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரிப்பதற்காக, அந்த கார்களை நோக்கிச் சென்றனர். காவல்துறையினர் வருவதைப் பார்த்து, தாபா உணவகத்தில் இருந்த 3 பேர் திடீரென்று வெளியே ஓட்டம் பிடித்தனர்.
தாபா முன்பு, அவர்கள் நிறுத்தியிருந்த மூன்று கார்களையும் விட்டுவிட்டு, தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் துரத்திச்சென்றனர். ஆனால் அதற்குள் தப்பிச்சென்று விட்டனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் தேவி, எஸ்.ஐ சுதாகர் ஆகியோரும் நிகழ்விடம் விரைந்தனர். மூன்று கார்களிலும் சோதனை செய்தபோது, அவற்றில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 633 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
தாபா உணவக உரிமையாளரிடம் விசாரித்தபோது, தப்பி ஓடிய நபர்கள் பெங்களூருவில் இருந்து கோவை செல்ல முயன்றது தெரிய வந்தது. குட்கா மற்றும் கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கார் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர்கள், கார் ஓட்டுநர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.