The police raided the rooms of the college students

கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் போதைப் பொருட்கள் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தி வருவது கோவையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்ட புறநகர்ப் பகுதி மற்றும் மாநகர பகுதியில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் மட்டுமின்றி, கல்லூரிக்கு வெளியிலும் அறை எடுத்துத் தங்கிப் பயின்று வந்துள்ளனர். இவ்வாறு தங்கி உள்ள மாணவர்கள் மத்தியில் பரவலாகப் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் இன்று (28.09.2024) காலையில் இருந்து கோவையில் உள்ள சரவணம்பட்டி, ஈச்சனாரி, பீளமேடு மற்றும் மதுகரை உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது போலீசார், மாணவர்கள் தங்கி உள்ள இடங்கள் மற்றும் உடைமைகள் வைத்துள்ள இடங்களில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். மேலும் சாக்லேட் மாத்திரை போன்ற வடிவங்களில் போதைப் பொருட்களை மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா என்றும் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் இதுவரையில் எந்த ஒரு மாணவர்களிடமிருந்தும் போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.