Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்...மனிதநேயத்தோடு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர்!!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி தமிழகத்தையே புரட்டிப்போட்ட கஜா புயலின் தாக்கம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்ட மக்களை இன்னும் எழும்பவிடவில்லை. விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அரசு பள்ளிகள், அலுவலகங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அனைவரையும் நடைபிணமாக வாழ வைத்துவிட்டது கஜா புயல்.

police helps mentally ill woman


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பேப்பர் மில் ரோடு கடைவீதியில் டீ கடை நடத்தி வந்த கணவரை இழந்த பரமநகரைச் சேர்ந்த சாவித்திரிக்கு 4 மகள்கள். 3 மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டாலும் ஒரு மகளை கரை ஏற்ற வேண்டும் என்று டீ கடையை தொடர்ந்து நடத்தினார். ஆனால் கஜா புயல் கடையையும், வீட்டையும் உடைத்து தூக்கி எரிந்துவிட்டது. உடமைகள் அத்தனையும் தண்ணீரிலும், காற்றிலும் காணாமல் போனது. 

இதை நினைத்து நினைத்து சாவித்திரி அழ.. தாயின் கண்ணீரை துடைக்க பள்ளிப் படிப்பை முடித்த மகள் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றார். ஆனால் தாயால் இதனை எல்லாம் சீரணிக்க முடியவில்லை. பலவற்றையும் நினைத்து குழப்பத்தில் தானாக பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டது. 

பகலில் ஓரிடத்தில் இருந்தாலும் இரவில் கிராமத்தை சுற்றி தன்னிலை குறித்து வீடு வீடாக பேசினார். கண்ணில் கண்டதை எடுத்து உடைத்தார். இப்படித்தான் இரவு ரோந்து சென்ற வடகாடு இன்ஸ்பெக்டர் பரத் ஸ்ரீனிவாஸ் கண்ணில் பட அவரைப் பற்றி விசாரிக்க கஜா புயலில் அனைத்தையும் இழந்து மனிநிலையும் பாதிக்கப்பட்டதை சொன்னார்கள்.

நேற்று இவரை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தவர், இப்படி பாதிக்கப்பட்டவரை உறவினர்கள் எப்படி வைத்து பாதுகாக்க முடியும் என்று புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்திடம் இது பற்றி பேசி அவரை சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மருத்தவர் கார்த்திக் தெய்வநாயம் விடுப்பில் இருந்தாலும் சக மருத்துவர்களிடம் பேசி சாவித்திரியை சிகிச்சைக்கு அனுமதிக்க கேட்டுக் கொண்டார். அதன் பிறகு உறவினர் வீட்டில் இருந்த சாவித்திரியை கொத்தமங்கலம் இளைஞர் முத்துவின் உதவியுடன் வாடகை கார் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இது குறித்து உறவினர்கள் கூறும் போது "கணவரும் இல்லை. கஜா புயல் கடை, வீடு அத்தனையும் கொண்டு போய் விட்டது. ஒரு மகள் மட்டும் இருக்கிறாள். அவளை கரைசேர்க்க முடியுமா என்று நினைத்தே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார். புயலுக்கு பிறகு குடியிருக்க ஒரு கொட்டகை கூட கட்ட முடியவில்லை. அதனால் உறவினர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார். இரவில் எங்காவது சென்றுவிடுவார். அப்படி தான் போலீசார் பிடித்து வந்து ஒப்படைத்தார்கள். இப்ப சிகிச்சைக்கும் அனுப்புகிறார்கள்.


அதனால் அரசாங்கம் சாவித்திரிக்கு ஒரு வீடு கட்டிக் கொடுப்பதுடன் மறுபடியும் கடை நடத்த கடன் உதவியும் செய்து கொடுத்தால் சிகிச்சைக்கு பிறகு பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றனர். கஜா புயல் உடமைகளை அழித்து மனநிலையும் பாதிக்க செய்துவிட்டது. அரசாங்கம் நினைத்தால் அந்த பெண்ணை நலமாக்கி வாழ வைக்கலாம்.
            
    
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

லாக்கப் மரணம்;  கொலை குற்றவாளியான காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய மனு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Petition seeking transfer of police inspector convicted in connection with Lockup incident

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இறந்த சுப்பிரமணியம் மனைவி எஸ்.ரேவதி விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி)அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை காவல்துறை துணைத் தலைவர் டிஐஜி திஷா மிட்டலிடம் கொடுத்தார்.

அந்த மனுவில் கடந்த 2015 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக விசாரணை என்ற பெயரில் அந்த சம்பவம் நடந்த பக்கத்து வீட்டில் பெயிண்டர் வேலைக்கு சென்று வேலை பார்த்து, சம்பவம் நடந்த அன்று பெயிண்ட் வேலைகக்கு செல்லாமல் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று வந்த எனது கணவர் சுப்பிரமணியத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவரை காவல் நிலைய லாக்கப் பில் வைத்து அடித்து, விரல் நகங்களை பிடிங்கி சித்திரவதை செய்ததின் பேரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை போலீசார் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது உயிரிழந்தார்.

அது குறித்த வழக்கின் விசாரணையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் வழக்கு விசாரணை வரும் 1/2/24 முதல் 5/3/24 வரையில் கடலூர் மாவட்ட எஸ்சி.எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், எனது கணவர் உயிரிழப்புக்கு காரணமான ஏ1 குற்றவாளி ராஜா என்ற காவல் ஆய்வாளர், தற்போது கடலூர் மாவட்டம், நெய்வேலி காவல் உட்கோட்ட வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், அவர் பணியாற்றும் அதே காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலர் அரசு தரப்பு சாட்சியங்களாக சாட்சியம் அளிக்க உள்ள நிலையில், அவர் அங்கு பணியாற்றி வந்தால் சாட்சியங்களை மிரட்டி கலைக்க வைக்க முயற்சி செய்வார் என்பதால் அவரை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் ரேவதி தெரிவித்துள்ளார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்  ஜி ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் வழக்கறிஞர்கள், ஜோதிலிங்கம் லெனின், மாதர்  சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மேரி ஆகியோர் உடன் இருந்தனர்,

இவ்வழக்கின் எதிரிகளான ஏ1 ராஜா, கடலூர் மாவட்டத்தில் வடலூர் காவல்நிலைய ஆய்வாளராகவும், ஏ2-கே..என்.செந்தில்வேல் காஞ்சிபுரம் மாவட்டம். திருக்கழுக்குன்றத்தில் உதவி ஆய்வாளராகவும், ஏ3 ஜே. செளமியன், கடலூர் மாவட்டம். கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வழக்கில் உள்ள 3 எதிரிகளும் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.