மரங்களை வளர்த்தெடுப்பது என்பது சவாலான பணி. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளரின் முன்னெடுப்பில், பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் - அரச மரங்களை மாவட்ட கல்லூரி வளாகத்தில் வைத்து, பசுமையை மீட்டெடுக்க பல அரிய செயலைச் செய்து வருகிறது அரியலூர் மாவட்ட காவல்துறை. ஒவ்வொரு மாவட்ட காவல்துறைக்கும் முன்னோடியாய் விளங்கும் அரியலூர் மாவட்ட காவல்துறையை 'பச்சை மனிதன்' தங்க சண்முக சுந்தரம் பாராட்டுக்குரியது என பல கூட்டங்களில் சொல்லி வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான வரலாற்றுப் புகழ் பெற்ற சான்றுகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது கடந்த 10 வருடங்களாக இளைஞர்களின் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் மழை வர வைக்கும் மரங்களை நடுவது என முடிவெடுத்து ஆலமரம், அரசமரம், வேம்பு, புங்கன், புளியமரம், பனை விதைப்பது என இடையக்குறிச்சி கிராமத்தில் 2 கி.மீ தூரத்திற்கு நூற்றுக்கணக்கான நாட்டு வகை மரங்களை வைத்து பராமரித்து வரும் இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரியது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு பிறந்தநாள் நினைவாக மரக்கன்றுகள் வழங்குவதும், ஒவ்வொரு கிராமத்திலும் புதிதாக திருமணமாகும் தம்பதிகளைக் கொண்டு மரக்கன்றுகள் நடுவதும், மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் மஞ்சள் துணியைப் போர்த்தி சூலம் நட்டு மரங்களை வணங்குவதும் என 'மரங்களின் நண்பர்கள்' அமைப்பு எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேபோல, பறவையினங்கள் கூடுகட்டி வாழ அட்டைப்பெட்டி பானையில் கூடுகட்டி உதவிசெய்வது என விதவிதமான முறையில் இயற்கையை மீட்டெடுக்க முயற்சிசெய்து வருவது அனைவரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க வைத்துள்ளது.